உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிக்கப் போராடி வரும் நிலையில் வைரஸ் தொற்று வராமல் இருக்க, அல்லது தொற்றை குணப்படுத்த ஏராளமான உடல் நல அறிவுரைகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பயனற்றவை என்ற போதும் தீங்கும் விளைவிக்காதவை. சில அறிவுரைகள் அபாயகரமானவை.
அப்படிப் பரவலாகப் பகிரப்படும் அறிவுரைகள் சிலவற்றையும் அது தொடர்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் இங்கே பார்ப்போம்.
மது அருந்துவது கொரோனாவைத் தடுக்காது
மதுவால் கொரோனாவைத் தடுக்க முடியம் என்ற அறிவுரை அடிக்கடி பகிரப்படுகிறது. இது தவறான தகவல் மட்டுமல்ல. தீங்கு விளைவிக்கும் வாய்ப்புள்ளதும் ஆகும்.
பொது முடக்க நிலையின்போது மூடப்பட்ட மதுக்கடைகளை உடனடியாகத் திறக்கவேண்டும் என்று ஓர் அரசியல்வாதி சொன்னார். “ஆல்கஹால் மூலம் கையை சுத்தம் செய்தால் கொரோனா வைரஸை அகற்ற முடியுமானால், ஆல்கஹால் அருந்துவதால் தொண்டையில் இருக்கும் வைரஸ் நிச்சயமாக போய்விடும்” என்று கூறினார் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான பரத் சிங்.
இந்தக் கூற்றுக்கு மருத்துவ ஆதாரம் ஏதுமில்லை. மது அருந்துவது வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கான ஒரு வழியல்ல என்று தெளிவுபடுத்திய உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதால் பிற உடல்நலப் பிரச்சனைகளால் சிக்கல் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என்றும் கூறியது.
கையை சுத்திகரிக்கும் ஜெல்களில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் பயன் குறித்து மட்டுமே உலக சுகாதார நிறுவனமும், பிற அதிகாரபூர்வ அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.
மூச்சை நிறுத்துவதால் கொரோனா தொற்று உண்டா என்று சொல்லமுடியாது
மூச்சைப் பிடித்து நிறுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்ற ஒரு கூற்று பல நாடுகளிலும் பகிரப்பட்டது. இந்தியாவில் உள்ள பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
இளைஞர்களும், ஆரோக்கியமானவர்களும் 1 நிமிடத்துக்கு மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்த முயற்சி செய்யவேண்டும் என்றும், வயோதிகர்கள், வேறு சில உடல் நலப்பிரச்சனைகள் உள்ளவர்கள் என்றால் 30 விநாடிகள் நிறுத்த முயல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அப்படி நிறுத்த முடியாவிட்டால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்று பொருள் என்று அவர் கூறினார். இந்தக் கூற்றுக்கு அறிவியல் அடிப்படை ஏதுமில்லை.
கடுகு எண்ணெய் நல்ல சிகிச்சையல்ல
மேற்சொன்னபடி மூச்சுப் பரிசோதனை செய்யும்போது மூக்குத் துவாரங்களில் சில சொட்டு கடுகு எண்ணெய் விட்டுக்கொண்டால் அந்த எண்ணெய், சுவாசப் பாதையில் இருக்கும் வைரஸை வயிற்றுக்குத் தள்ளிவிட்டுவிடும் என்றும், அங்கேயுள்ள அமிலத்தில் வைரஸ் செத்துவிடும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார். இது தவறான கூற்று.
வட இந்தியாவில் பாபா ராம்தேவை ஏராளமானவர்கள் பின்பற்றுகின்றனர். பல பொருள்களை விற்கிற வணிக சாம்ராஜ்யத்தையே நடத்துகிறார் ராம்தேவ்.
இந்த கடுகு எண்ணெய் மூலம் கொரோனாவை விரட்டும் கூற்று தவறு என்று இந்திய அரசு நடத்திய உண்மைப் பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுவிட்டது.
புறஊதா கதிர்கள் தொற்று நீக்குமா?
தொற்று நீக்கி திரவத்தை உடலில் ஊசி மூலம் செலுத்துவது பற்றி கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டது முதல் அந்தக் கூற்று பல முறை, பல நாடுகளில், பல வடிவங்களில் சமூக ஊடகங்களில் பேசப்பட்டுவிட்டது.
மேற்பரப்பில், வெளிப்புறத்தில் தொற்று நீக்கித் திரவத்தைப் பயன்படுத்துவது வைரஸைக் கொல்லும். ஆனால், அதே தொற்று நீக்கித் திரவத்தை உள்ளுக்கு எடுத்துக்கொண்டால் அது நஞ்சாகும்.
மரணம்கூட ஏற்படும். அது தவிர இப்படி உள்ளுக்கு எடுத்துக் கொள்வது வைரஸைக் கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.
நோயாளிகள் மீது புற ஊதாக் கதிர்களை செலுத்துவது பற்றியும் டிரம்ப் பேசினார். வெளிப்புறத்தில், மேற்பரப்பில் நேரடியாக வெயில் படும்போது வைரஸ் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்காது என்று கூற கொஞ்சம் ஆதாரம் உள்ளது.
ஆனால், இப்படி வெயிலில் நீண்ட நேரம் நிற்பது மனித திசுக்களை சேதமாக்கும். அத்துடன் வைரஸ் உள்ளவர்களுக்கு புற ஊதாக் கதிர் ஒரு நல்ல சிகிச்சை என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.