இரவு முழுவதும் விளையாடுவது, பின்பு பகலில் தூங்குவது,பெற்றோர் பேச்சைக் கேட்காமல் இருப்பது நமக்கு தோன்றியவற்றை செய்வது என மனிதர்கள் பருவ வயதில் செய்வதை நாம் பரவலாகக் காணலாம்.
ஆனால் மனிதர்களைப்போல செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களும் வளர் இளம் பருவ வயதில் இதே போன்ற சில மாற்றங்களை எதிர்கொள்ளும்.
பிரிட்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நாய்கள் பருவ வயதை எட்டியவுடன் மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது.
அதற்காக புகைபிடிப்பது அல்லது தன்னை வளர்ப்பவரை திட்டுவது போன்றல்லாமல், தம்மை வளர்ப்பவர்கள் இடும் உத்தரவை கேட்காமல் இருப்பது போன்றவற்றை நாய்கள் செய்யும். மேலும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பது அந்த நேரத்தில் கடினமாக இருக்கும். பருவ வயது இருக்கும்வரை நாய்கள் அப்படித்தான் இருக்கும்.
நாட்டிங்ஹாம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த குழு ஒன்றால், 69 நாய்கள் அதன் பருவ வயதை அடைவதற்கு முன்னரும் (நாய்களுக்கு ஐந்து மாதமாகியிருந்தபோது) பருவ வயதில் இருக்கும் போதும் (நாய்களுக்கு எட்டு மாதமாகியிருந்தபோது) கண்காணிக்கப்பட்டன.
இந்த நாய்கள் பருவ வயதில் தங்களுக்கு செய்யத் தெரிந்த செயல்களாக இருந்தாலும், அவற்றுக்கு பணிக்கப்பட்ட உத்தரவை மதிக்க நீண்ட நேரம் எடுத்து கொள்கின்றன. ‘உட்காரு’ என்ற உத்தரவுக்கு உட்காரத் தெரிந்தாலும் அதை நீண்ட நேரம் கழித்துதான் செய்கின்றன.
285 நாய் வளர்ப்பவர்களிடம் அவற்றின் நடத்தை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டபோதும், இதையேதான் அவர்களும் கூறினார்கள். பருவ வயதில் இருக்கும் விலங்குகளைப் பயிற்சி செய்வது கடினம் என்றனர்.
“ஆனால் இந்த நடவடிக்கைகள் தங்களை வளர்ப்பவர்களிடம் மட்டுமே இந்த விலங்குகள் காட்டுகின்றன. மற்றவர்களை சந்திக்கும்போது சரியாக நடந்து கொள்கின்றன. இது உங்கள் அம்மாவிடம் மட்டுமே நீங்கள் கோபத்தைக் காட்டுவது போன்ற செயல் ,” என்கிறார் விலங்கியலாளர் டாக்டர். நவோமி ஹார்வே.
“நாய்கள் வளர் இளம் பருவத்தில் தங்கள் உரிமையாளர்களின் பேச்சை மட்டுமே கேட்காது. மற்றவர்களுடன் நன்றாக பழகும் என்பதை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளோம்,” என்கிறார் நவோமி.
“இவையனைத்தும் நாய்களின் வளர் இளம் பருவத்தில் அவற்றினுள் நடக்கும் மாற்றங்களோடு தொடர்புடையது. அவற்றின் ஹார்மோன் அளவில் உண்டாகும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பக்குவப்பட்ட வயதுக்கானதாக மாற மூளை அமைப்பில் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள்,” என்கிறார் நவோமி.
பருவ வயது நாய்களுக்கும் நாய்களின் உரிமையாளர்களுக்கு இருக்கும் நல்ல செய்தி என்னவென்றால் இது நிரந்தரமான மாற்றம் கிடையாது. பருவ வயதை தாண்டிவிட்டால் நாய்கள் முன்பு இருந்ததைவிட மிகவும் கீழ்படிந்து நடக்கத் தொடங்கும்.
நாய்களின் வாழ்வில் இது மிக முக்கியமான காலகட்டம் என்கிறார் விலங்குகள் நடத்தை பற்றி ஆராயும் டாக்டர். லூசி ஆஷர். இந்த நாய்களின் பருவ வயது நடத்தை பற்றிய ஆராய்ச்சிக்கு தலைமையேற்றவர் இவர்.
“இந்த சமயத்தில் பெரும்பாலான மக்கள் நாய்களை பராமரிப்பு நிலையங்களில் விட்டுவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் வளர்க்கும் நாய், நாய்க்குட்டி போல் நடந்துகொள்ளாது. மேலும் அதை கட்டுபடுத்தி பயிற்சி அளிப்பதும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் பதின்ம பருவத்தில் இருக்கும் குழந்தைகளைப் போல, நாய்களும் மாற்றங்கள் உண்டாகும் காலகட்டத்தைக் கடக்கும். இதுவும் கடந்து போகும் என்று நாய் வளர்ப்பவர்கள் நம்ப வேண்டும்” என்கிறார் டாக்டர்.
“இந்த நேரத்தில் உரிமையாளர்களை நிதானமாக இருக்குமாறு கூறுவோம். அதற்கு தண்டனை அளிப்பதற்கு பதில் பரிசுகள் வழங்கக் கூறுவோம். நாய்கள் வேண்டுமென்று அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. அது நாய்களின் இயற்கை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாய்களிடம் அதன் உரிமையாளர்களை அன்புடன் நடந்து கொள்ளு மாறு அறிவுரை கூறுவோம்,” என இந்த சூழலை சமாளிக்க லூசி ஆஷர் ஆலோசனை கூறுகிறார்.