கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசை இந்த சமூகத்தில் இருந்து அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கு உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் கணக்கற்ற ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
ஆனாலும் இந்த கொலைகார கொரோனா வைரஸ் தினமும் காட்டுத்தீ போல மனிதர்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்கிற வசதி உலகமெங்கும் பெரிய அளவில் இல்லை, மலிவானதாகவும் இல்லை. இதனால் நோய் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர்கள் பலருக்கு பரப்பி விடுகிற அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. அவர்களுக்கும் சில நேரங்களில் நோய் முற்றிவிடுகிற பரிதாபங்களும் நேர்கின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு, அதிலும் அவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதற்கான வெளி அடையாளங்கள் தெரிவதற்கு முன்பே கண்டுபிடிப்பதற்கு, மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
ஆக, கொள்ளையர்களை, கொலைகாரர்களை, திருடர்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க பழகிய மோப்ப நாய்கள், இனி கொரோனா வைரஸ் பாதித்தவர்களையும் அடையாளம் கண்டு சொல்லும் நாட்கள் தொலைவில் இல்லை.
இதற்கான சோதனையை லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்துகின்றனர். அவர்கள் மருத்துவ மோப்ப நாய்கள் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்துகிறார்கள்.
இந்த ஆராய்ச்சியின் முதல்கட்ட நோக்கம், ஒருவரின் உடலில் ஏற்படுகிற மணத்தின் அடிப்படையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா? என்பதை தீர்மானிப்பது ஆகும்.
இந்த சோதனையானது பல்கலைக்கழகங்களின் முன்னணி நோய் கட்டுப்பாட்டு வல்லுனர்களையும், மருத்துவ மோப்ப நாய்களையும் ஒன்றிணைக்கிறது.
இந்த நிபுணர்கள் ஏற்கனவே இத்தகைய நாய்களை புற்றுநோய், மலேரியா, பார்கின்சன்ஸ் டிசீஸ் என்று அழைக்கப்படுகிற நடுக்குவாத நோய் பாதித்தவர்களை அவர்கள் உடலில் உள்ள வாசனை மூலம் கண்டறிய வெற்றிகரமாக பழக்கியவர்கள் ஆவார்கள்.
இதுபற்றி இங்கிலாந்து புதுமையான கண்டுபிடிப்புகள் துறை மந்திரி லார்டு பெத்தேல் கூறும்போது, “இத்தகைய நாய்கள் ஏற்கனவே குறிப்பிட்ட புற்றுநோய்களை கண்டறிந்துள்ளன. மேலும், இந்த கண்டுபிடிப்பு எங்கள் பரந்த பரிசோதனை முறையில் வரைவான முடிவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இதில் துல்லியமான முடிவுகள் அவசியம். எனவே இந்த சோதனை, கோவிட்-19 மோப்ப நாய்களால் கொரோனா வைரசை நம்பத்தகுந்த முறையில் கண்டறிந்து, பரவுவதை நிறுத்த முடியுமா என்பதை நமக்கு தெரிவிக்கும்” என்றும் அவர் கூறினார்.
கொரோனா அறிகுறிகள் இல்லாத அதே நேரத்தில் அந்த வைரஸ் பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டறிய மோப்ப நாய்களை பயிற்றுவிக்க முடியுமா? என்பது இந்த சோதனை முடிவில் தெரியவரும்.
கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு சோதனைகளில் இதுவும் ஒன்றாக அமையும்.
ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள், கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மாதிரிகளை சேகரிப்பார்கள். இதே போன்று கொரோனா வைரஸ் பாதிக்காதவர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்படும்.
இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படுவதற்கு 6 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதாவது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மாதிரிகளை அடையாளம் காண்பதற்கு இந்த நாய்களுக்கு வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்படும்.
மருத்துவ மோப்ப நாய்களைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள், ஒரு மணி நேரத்தில் 250 மனிதர்களை ஆராய முடியும் என காட்டுகின்றன.
இதுபற்றி லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவ கல்லூரியின் நோய் கட்டுப்பாடு துறைகள் பேராசிரியர் ஜேம்ஸ் லோகன் கூறும்போது, “எங்கள் முந்தைய சோதனைகள் மலேரியாவுக்கு ஒரு தனித்துவமான மணம் இருப்பதை காட்டி உள்ளது. மருத்துவ மோப்ப நாய்களை மலேரியா பாதித்தவர்களை துல்லியமாக கண்டறிய வெற்றிகரமாக பயிற்றுவித்து இருக்கிறோம். கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பொறுத்தமட்டில், அது சுவாச நோய் என்பதால் உடல் மணத்தை மாற்றும் என்ற அறிவோடு இணைந்து, நாய்கள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த சோதனை வெற்றி கண்டுவிட்டால், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடிக்க இது ஒரு புரட்சிகரமான வழியாக அமையும். அதிகப்படியான நபர்களை சோதனைக்கு உட்படுத்தவும் முடியும்” என்று குறிப்பிட்டார்.
மருத்துவ மோப்ப நாய்கள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டாக்டர் கிளாரி கெஸ்ட் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “மருத்துவ மோப்ப நாய்களை பொறுத்தமட்டில், மனிதர்களை சோதித்து அறிய உதவுகிற ஆற்றல் உண்டு. எனவே கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் உடல் மணத்தை கொண்டு அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று அவைகளால் கண்டுபிடித்து சொல்லி விட முடியும் என நம்புகிறோம். அதன் பின்னர் வேண்டுமானால் இரண்டாவது கட்ட சோதனை நடத்தி உறுதி செய்து கொள்ளலாம். எங்களைப் பொறுத்தமட்டில் நாய்களின் மூக்குகளின் மோப்ப சக்தி கொரோனா வைரஸ் தாக்கியவர்களை அடையாளம் காண உதவும், இதனால் பல நோயாளிகளை சீக்கிரமாக அடையாளம் காணப்பட்டு உயிர் பிழைக்கச்செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் கண்டு சொல்ல மோப்ப நாய்கள் சீக்கிரம் வந்து விடும் என்று நாமும் நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!