ரஜினி அடுத்ததாக அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘கபாலி’ என பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். மேலும் ‘மெட்ராஸ்’ படத்தில் ரசிகர்களை கவர்ந்த கலையரசன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டோ ஷூட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கலையரசனை முதல்முறையாக பார்த்த ரஜினி அவரை பெயர் சொல்லி அழைத்து பேசியிருக்கிறார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார் கலையரசன்.
மேலும் ரஜினி தன்னிடம் பேசியது குறித்து அவர் கூறும்போது, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இப்போதுதான் நேரில் சந்தித்தேன். அவர் என்னுடைய பெயரை சொல்லி அழைத்து பேசினார். இது என்னுடைய மிகப்பெரிய நாள். அவர் பேசியதும் என்னால் அதிர்ச்சியில் பேச முடியவில்லை. நான் இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. வானத்தில் பறப்பது போல் இருக்கிறது’ என்றார்.