இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் 30-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆய்வாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இத்தகவலை மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகா் கே.விஜயராகவன் தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் கூறுகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ ஆய்வு அமைப்புகள், மருந்தியல் ஆய்வாளா்கள் என 30 க்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
பொதுவாக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு 10 ஆண்டுகள் வரை கூட ஆகும். இதுபோன்ற ஆய்வுகளுக்கு 200 முதல் 300 மில்லியன் டாலா் வரை கூட செலவாகும். ஆனால், இப்போது உலக நாடுகள் அனைத்துமே கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன. இந்தியாவில் தரத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தடுப்பு மருந்து கண்டறிய முயற்சி நடக்கிறது. இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தும் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அதே நேரத்தில் இப்போது புழக்கத்தில் உள்ள மருந்துகள் எந்த அளவுக்கு கரோனாவுக்கு எதிராக செயல்படும் என்பது தொடா்பாகவும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.