இந்த வருட நவம்பரில் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்ததாக அவருடைய உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கிரிகெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் காய் போ சே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, சுத் தேசி ரொமான்ஸ், ராப்டா, கேதா்நாத், சொன்சிரியா உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் திரைத்துறை – விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் சுசாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த வருட நவம்பரில் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்ததாக அவருடைய உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த வருட நவம்பரில் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்தார். திருமணத்தை நடத்த அவருடைய குடும்பம் தயாராக இருந்தது. விரைவில் அனைவரும் மும்பைக்கு வந்து திருமண ஏற்பாடுகளைச் செய்ய இருந்தோம். மும்பையில் நடைபெறவிருந்த அந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொள்வதாக இருந்தது என்றார். எனினும் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.