இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவரது அண்ணி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், திங்களன்று சுஷாந்தின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயத்தில், அவரது சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் உயிரிழந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சுஷாந்த் ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்தபின் உணவு உட்கொள்வதை அவர் நிறுத்திக்கொண்டார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பின்னர் அவருக்கு ‘கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‘பவித்ர ரிஷ்தா’ என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.
‘காய் போ சே’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் ‘சிசோரே’ என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.
அவரது இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.