உலகளவில் 2040ம் ஆண்டிற்குள் 1.3 பில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்திலும் கடலிலும் குவிந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படவிருக்கும் பிரச்சனையை உலக நாடுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப உதவியுடனே இதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கோஸ்டாஸ் வெலிஸ் கூறுகிறார்.
”உலகின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதில்தான் சிக்கல் உள்ளது” என்கிறார் அவர்.
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாடு மற்றும் கழிவுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தபோது, 1.3 பில்லியன் டன் கழிவுகள் தேங்கிக் கிடக்கும் என்ற அளவை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
பிளாஸ்டிக் வர்த்தகம், மறுசுழற்சி, மறுபயன்பாடு உள்ளிட்டவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழாத சூழலில்தான் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கணித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பியூ எனும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் வின்னி லவ் பிபிசியிடம் பேசுகையில், ”பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த இன்னும் நம்மிடம் சில தீர்வுகள் உள்ளன. 2040ம் ஆண்டுக்குள் 80% பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும்” எனக் கூறுகிறார்.
எப்படியெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும்?
பிளாஸ்டிக் உற்பத்தியையும் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக பேப்பர்களையும்; மக்கக்கூடிய பொருட்களையும் பயன்படுத்தலாம்.
மறுசுழற்சி செய்யும் வகையிலான பொருட்களையே தயாரிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை ஒழித்துவிட்டுத் துணிப் பைகளைப் பயன்படுத்தலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கழிவுகளைச் சேகரிக்கும் திட்டங்களை விரிவு படுத்த வேண்டும்.
மறுசுழற்சி செய்ய முடியாத 23% பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்தத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அடுத்த இரண்டு தசாப்தங்களில் 710 மில்லியன் டன் கூடுதல் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் தேங்குவது உறுதி என வெலிஸ் விளக்குகிறார்.
உலகின் தெற்கு பகுதியில் வாழும் 2 பில்லியன் மக்களுக்கு முறையான கழிவு மேலாண்மை வசதிகள் இல்லை என்பதும் இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த எந்த வழிகளும் இல்லாத காரணத்தால் 2 பில்லியன் மக்கள் வேறு வழியில்லாமல் பிளாஸ்டிக்குகளை தேக்கி வைக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் சுமாராக 11மில்லியன் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மறுசுழற்சி பொருட்களைச் சேமித்து வைத்து அதன் மூலம் பணம் ஈட்டுகின்றனர்.
இவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததே இதற்குக் காரணம். உலகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதே நேரத்தில் இவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த சில திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பணம் சம்பாதிக்கும் ஊழியர்களால்தான் மறுசுழற்சி முறை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. மேலும் கழிவுகள் கடலுக்கு செல்லாமல் தடுக்கப்படுவதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பணம் சம்பாதிக்கும் ஊழியர்களின் பணி மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை கண்காணித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வெலிஸ் கூறுகிறார்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லான் காணே, சமீபத்தில் கடலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்குகளை குறித்து ஆய்வில் ஈடுபட்டார். அந்த ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் அச்சம் தரக்கூடியதாக இருந்தது என லான் காணே குறிப்பிடுகிறார்.
உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தேவை அதிகம் உள்ளதாலேயே அதன் உற்பத்தி விகிதமும் அதிகமாக உள்ளது. இதுவே சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என லான் காணே பிபிசியிடம் கூறுகிறார்.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த சூழல் மாறியுள்ளது என பேராசிரியர் ஜாமி வூட்வார்ட் கூறுகிறார்.
”சுகாதார பணியாளர்களை பிளாஸ்டிக்தான் தற்போது பாதுகாத்து வருகிறது. ஆனால் தேவைக்காகப் பயன்படுத்திவிட்டு நாம் தூக்கி வீசப்போகும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் அடுத்த தசாப்தங்களில் பெரும் கழிவுகளாக உருவெடுக்கப்போகிறது. வழக்கம் போல இந்த மாற்றங்கள் காலநிலை மாற்றத்தில் பிரதிபலிக்கும். நமது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்” என ஜாமி வூட்வார்ட் கூறுகிறார்.