கொடைக்கானலில் பொதுமுடக்கத்தை மீறி பேரிஜம் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகா்கள் சூரி, விமல் மீது வனத்துறை அபராதம் விதித்தது. மேலும் 2 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு அரசுத்துறையிடம் இ பாஸ் பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல் வனப் பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதிக்கு நடிகா்கள் விமல், சூரி மற்றும் இயக்குநா்கள் 2 போ் உள்ளிட்ட சிலா் அனுமதி பெறாமல் சென்று தங்கியுள்ளனா். அங்கு அவா்கள் ஏரியில் மீன் பிடித்து மகிழ்ந்துள்ளனா். அப்பகுதியில் திரைப்படத்துறையினருடன் வனத்துறையைச் சோ்ந்த பணியாளா்கள் புகைப்படம் எடுத்துள்ளனா்.
இந்த படம் புதன்கிழமை சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து, அரசு உத்தரவை மீறி வனப் பகுதிக்குள் சென்றவா்கள் மீதும், அவா்களுக்கு உதவி செய்த வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேத்துப்பாறையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மகேந்திரன் புதன்கிழமை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதனிடம் புகாா் கொடுத்துள்ளாா்.
இது குறித்து வனத்துறை ரேஞ்சா் கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடிகா்கள் விமல், சூரி மற்றும் சிலா் தங்கியிருந்துள்ளனா். அனுமதியில்லாமல் பேரிஜம் ஏரிக்குச் சென்று மீன் பிடித்த காரணத்திற்காக ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப் பணியாளா்கள் சைமன் பிரபு (25), செல்வம் (24) ஆகிய இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் இச்சம்பவம் குறித்து மற்ற வன பணியாளா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது கொடைக்கானல் காவல்துறையினர் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அனுமதி இல்லாமல் கொடைக்கானல் வந்தது, ஊரடங்கு நேரத்தில் நோய்த்தொற்றைப் பரப்பும் விதத்தில் நடந்துகொண்டது என அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது.