சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வரு கின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
நாகர்கோவில் தொகுதியில் 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நாஞ்சில் முருகேசன். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2016 தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். நேற்று முன்தினம் இரவு, இவரை கட்சியின் அடிப் படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஒரு சிறுமி விவ காரத்தில் நாஞ்சில் முருகேசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவியை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்று விட்டதாக, அவரது தந்தை புகார் கூறியிருந்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு மாணவியையும், அவரை அழைத்துச் சென்ற இளைஞரையும் போலீஸார் மீட்டனர்.
மாணவியிடம், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின. தன்னை கடந்த 4 ஆண்டுக ளாக முக்கிய பிரமுகர்கள் பலர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், உறவினர்களே இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.
2017-ல் தனது தாயார், நாஞ்சில் முருகேசனிடம் அழைத்துச் சென்ற போது, அவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மாணவி கூறியுள்ளார். இது தவிர, சிறுமியிடம் போலீஸார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதில், நாஞ்சில் முருகேசன் தவிர, ஒரு தொழிலதிபர், முதியவர், ஆட்டோ ஓட்டுநர் என மேலும் 3 பேர் தன்னை பல நாட்களாக மிரட்டி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த சிறுமி கூறியுள்ளார். மேலும், தன்னை பாலியல் தொல்லை செய்தவர் களையும், அவர்களின் வீட்டையும் அடையாளம் காட்டுவதாகச் சிறுமி கூறினார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நாஞ்சில் முருகேசன் உட்பட 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ், நாகர்கோவில் மகளிர் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, காப்பகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகியுள்ளார். இதில் தொடர்புடைய நான்கு பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் புத்தேரியில் உள்ள நாஞ்சில் முருகேசனின் வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சிறுமியிடம் நேற்று முன்தினம் வாக்குமூலம் பெறப்பட்டதுமே, இரவோடு இரவாக நாஞ்சில் முருகேசனைக் கட்சியிலிருந்து நீக்கி, தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பிறகே அவர் மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.