உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாததால் சுற்றுலாத் துறைக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மத்திய-மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது தாஜ்மகால் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்ர் 21-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
தாஜ்மகாலில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தாஜ்மகால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும். தாஜ்மகால் செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.