அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் ரோனோகி என்ற இடத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. அந்த சேனலின் 24 வயது பெண் செய்தியாளர் அலிசன் பார்க்கர் மற்றும் கேமராமேன் ஆடம் வார்டு (27) ஆகியோர் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், சுற்றுலா பற்றி ஒரு பெண்ணிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.
அந்த நிகழ்ச்சி, நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். சுமார் 8 தடவை துப்பாக்கியால் சுட்டார் அந்த நபர். புன்னகைத்தப்படி பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணும், கேமராமேனும் அலறியபடியே கீழே சாயும் காட்சி, பலியான ஒளிப்பதிவாளரின் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் பலியானார்கள். பேட்டி அளித்துக்கொண்டிருந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அந்த தொலைக்காட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பணியாளரால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.