பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து இந்திய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உட்பட இரண்டு பேரை கைது செய்திருந்தது. ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று (08) மதியம் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
‘‘ரியா சக்ரபோர்த்தியை நீதிபதி முன் ஆஜர்படுத்த இருக்கிறோம். அவரை எங்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை. ஆனால், நீதிமன்ற காவலுக்கு வலியுறுத்துவோம். எல்லாவித கேள்விகளும் கேட்கப்பட்டதால், நாங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வலியுறுத்தமாட்டோம். ஆனால், பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்போம்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. அவரை கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரிடம் இருந்து சட்டவிரோதமான எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை’’ என்று தென்மேற்கு மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை டிஜி முத்தா அசோக் ஜெயின் தெரிவித்தார்.
அதன்பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிணை மனு தாக்கல் செய்தார். ரியா சக்ரபோர்த்தியின் பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.