மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனாவை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகம் இடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை கங்கனா ரனாவத் முன் வைத்துள்ளார். தனது அலுவலகத்தை மும்பை கார்ப்ரேஷன் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மும்பை நீதிமன்றத்தையும் கங்கனா ரனாவத் நாடியுள்ளார்.
ஹிமாச்சலில் இருந்து மும்பை வந்து கொண்டிருக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின், மும்பை அலுவலகம், அத்துமீறி கட்டப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப் பட்ட நிலையில், தற்போது அதனை இடிக்க ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் வந்து விட்டனர்.
இந்நிலையில், உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மும்பை நீதிமன்றத்தின் உதவியை நடிகை கங்கனா ரனாவத் நாடியுள்ளார். இன்று மதியம் அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. தொடர்ந்து மகாராஷ்ட்ரா அரசை நடிகை கங்கனா ரனாவத் குறை சொல்லி வந்ததால் பழிவாங்கும் நடவடிக்கையை தற்போது மகாராஷ்ட்ரா அரசு எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் நடிகை கங்கனா ரனாவத் முன் வைத்துள்ளார்.
மும்பையில் நடக்கும் போதைப் பொருள் புழக்கம், பாலிவுட் மாஃபியா, சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை என எல்லாவற்றுக்கும் சிவசேனா அரசு தான் காரணம் என சமீபத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நடிகை கங்கனா ரனாவத் முன் வைத்திருந்தார்.
அவரது மும்பை அலுவலகம் தற்போது இடிக்கப்பட உள்ள நிலையில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் என்று குறிப்பிட்டு ஏகப்பட்ட ட்வீட்களையும் நடிகை கங்கனா ரனாவத் போட்டு வருகிறார். 33வயதாகும் நடிகை கங்கனா ரனாவத் தனி ஒரு ஆளாக பாலிவுட் மாஃபியாவையும் மகாராஷ்ட்ரா அரசையும் துணிச்சலோடு எதிர்த்து வருகிறார் என பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், பழிவாங்கும் நடவடிக்கையை சிவசேனா அரசு உடனடியாக கை விட வேண்டும் என்று கங்கனா ரனாவத்தின் ரசிகர்களும், கர்ணி சேனா அமைப்பினரும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். தான் மும்பைக்கு வருவதற்கு முன்னதாகவே, அவசர அவசரமாக தனது அலுவலகத்தை மும்பை கார்ப்ரேஷன் அதிகாரிகள் இடித்து நொறுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ஜனநாயகம் இறந்து விட்டது என்றும் நடிகை கங்கனா ரனாவத் கொந்தளித்துள்ளார். இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ள வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதை காண ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.