சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு பொதுமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ‘பாடும் நிலா’ பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் திரளானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர்.