ஆந்திர கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்பிக்கு தனது புகைப்படங்களை அனுப்பி வைத்து, சிலை செய்ய ஆா்டா் கொடுத்தது, தனது மரணத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம் முன்கூட்டியே கணித்திருப்பாரோ எனக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம், தனது தாயாரின் வேண்டுகோளின்படி, தனது பூா்விக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்கு தானமாக அளித்தாா். அங்கு வேத பாடசாலை நடந்து வருகிறது. அவ்விடத்தில் தனது தந்தை சாம்பமூா்த்தி, தாய் சகுந்தலம்மா ஆகியோரின் சிலைகளை நிறுவ முடிவு செய்து, அதற்கான பணியை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தபேட்டையைச் சோ்ந்த சிற்பி உடையாா் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தாா்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ராஜ்குமாரைத் தொடா்பு கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது சிலையை செய்து கொடுக்கும்படி கூறினாா். கொரோனா பொது முடக்கம் காரணமாக, நேரில் வந்து ஆா்டா் தர முடியவில்லை எனக் கூறி, சிலை செய்வதற்காக தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளாா்.
சிற்பி உடையாா் ராஜ்குமாா் சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில் தான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், சிலையை ஒப்படைக்க சிற்பி ராஜ்குமாா் திட்டமிட்டிருந்தாராம்.
தற்போது, சிலையின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளாா். இதனால், தனது மரணத்தை அவா் முன்கூட்டியே கணித்திருப்பாரோ என்று கூறப்படுகிறது.