கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சிகிச்சைக்காக தங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்தைப் பொறுத்தவரை, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் நோய்த் தொற்றுக்கான வெளிப்புற அறிகுறிகள் ஏதும் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதாவிற்கான சோதனைகள் முடிந்தவுடன் விஜயகாந்த் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் மருத்துவமனை கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.