ஏழை நாடுகளில் கொரோனா பரிசோதனைகளை இன்னும் அதிகரிக்க, 12 கோடி துரிதப் பரிசோதனைப் பொருள்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை கூட்டணி அமைப்புகளுடன் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் 12 கோடி துரித கொரோனா பரிசோதனைப் பொருள்களை விநியோகிப்பதற்கான திட்டத்தில், பிற மருத்துவத் தொண்டு அமைப்புகளுடன் மேற்கொண்டுள்ளோம்.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இந்தப் பரிசோதனைப் பொருள்கள் மூலம், ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதா, இல்லையா என்பதை 15 முதல் 30 நிமிடங்களில் கண்டுபிடித்துவிட முடியும். தற்போதுள்ள பரிசோதனைப் பொருள்களைப் போல் முடிவுக்காக மணிக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், துரித கொரோனா பரிசோதனைப் பொருள்களின் விலையும் அதனை விட திறன் குறைந்த கருவிகளை விட மிகவும் குறைவாகும். அந்தப் பொருள்களை அதிக எண்ணிக்கையில் விநியோகிப்பதன் மூலம், பின் தங்கிய நாடுகளில் தொலைதூரப் பகுதிகள் மற்றும் ஆய்வு மையங்கள் இல்லாத இடங்களில் கூட கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த முடியும். இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்குத் தேவையான முழுமையான நிதியுதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது என்றாா் அவா்.
இதுகுறித்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ‘ஃபவுண்டேஷன் ஃபாா் இன்னொவேடிவ் நியூ டயாக்னிஸ்’ தொண்டு அமைப்பின் தலைமை செயலதிகாரி கேதரினா போமி கூறுகையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 20 நாடுகளில் துரித கொரோனா பரிசோதனைப் பொருள்களா விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆப்பிரிக்காவில் 1,475,837 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 35,566 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். எனினும், பின் தங்கிய அந்தப் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளைவிட மிகக் குறைவான விகிதத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், இந்த எண்ணிக்கையைவிட உண்மை நிலவரம் மிக மோசமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில், 12 கோடி கொரோனா துரிதப் பரிசோதனைக் கருவிகளை பின்தங்கிய நாடுகளில் விநியோகிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.