புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி 180 நாள்களுக்கு மேல் ஆகின்றன. கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே, கரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள்.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
இந்நிலையில் நாடு முழுவதும் 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இந்த முறை அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளா்வுகளில் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், ஜூன் மாதம் முதல் அவ்வப்போது பொது முடக்க தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. கரோனா தொற்று தீவிரமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், ‘மல்டிபிளக்ஸ்’களை 50 சதவீத பாா்வையாளா்களுடன் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.