காலநிலை மாற்ற நிகழ்வுகளால் கடந்த மாதம் உலகின் வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியுள்ளது.
உலகில் பல்வேறு பகுதிகளிலும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் உணரப்பட்டு வருகிறது. உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதம் முன்னெப்போது இல்லாத அளவிற்கு வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியுள்ளது. ஆகும்.
அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 0.05 செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் சைபீரிய ஆர்க்டிக் உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக தொழிற்சாலைகள் இயங்குவது தடைபட்டிருந்தாலும் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்டக் காட்டுத்தீ ஆகியவை வெப்பநிலை உயர்வில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் வெப்பநிலையானது பல்வேறு நாடுகளில் மோசமான இயற்கை சீற்றங்களுக்கு காரணமாக அமைவதாக தெரிவித்துள்ள நிலையில் வழக்கத்திற்கு மாறான பேரிடர்களுக்கு இவை வழிவகுப்பதாக இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபியக் கடலும் சராசரியை விட அதிகமான சூறாவளிகளைக் கண்டன.
பிரான்ஸ், இத்தாலி ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகள், ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிக எண்ணிக்கையில் வெட்டுக்கிளி வருகை, புதிய புயல்கள் உருவாக்கம், பனிமூட்ட நிகழ்வுகள் குறைவது போன்றவை காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகளாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.