தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ரஜினிகாந்த் தொடர்ந்திருந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.5 லட்ச ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
ரஜினிகாந்த் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், அந்தத் திருமண மண்டபத்திற்கு தான் தொடர்ந்து வரி செலுத்திவருவதாகவும் கடைசியாக பிப்ரவரி மாதம் வரி செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவலின் காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்ச் 24 ஆம் தேதிக்குப் பிறகு தனது திருமண மண்டபத்தை யாரும் வாடகைக்கு எடுக்கவில்லை; இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்னை மாநகராட்சியிலிருந்து வந்த நோட்டீஸில் 6.5 லட்சம் செலுத்தும்படி கூறப்பட்டிருந்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மார்ச் 24 ஆம் தேதிக்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, வாங்கப்பட்டிருந்த முன்பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், வருமானம் இல்லாத காலகட்டத்தில் சொத்துவரியை பாதியாகக் குறைத்து வசூலிக்கலாம் எனக் கோரி செப்டம்பர் 23ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியபோதிலும் அது தொடர்பாக பதில் ஏதும் வரவில்லையென்பதால் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் ரஜினிகாந்தின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சம்பத் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது “மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட 10 நாட்களுக்குள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். அவர்கள் பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டாமா? அப்படியும் பதில் இல்லையென்றால் நினைவூட்டல் கடிதங்களை அனுப்ப வேண்டும். அப்படி ஏதும் செய்யமால் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறீர்கள். இது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக உள்ளது. இந்த வழக்கை அபராதத்துடன் ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது?” என நீதிபதி கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான மனுவைத் தாக்கல்செய்யும்படியும் இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகள் முடிந்த பிறகு, அந்த மனு பரிசீலிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுமென நீதிபதி தெரிவித்திருக்கிறார்.