பிரான்சில் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் மாணவர்களிடம் காட்டியதால் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என்று காவல் துறை கூறுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18 வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.
கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற அப்துல்லா என்பவர், தங்களைத் தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, கொலை நடந்த வெள்ளிக்கிழமை அன்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40 பேரின் வீடுகளில் திங்களன்று காவல்துறையினர் சோதனை செய்தனர்.
மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பேட்டி கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறினார் என்று தெரிவிக்கப்படுகிறது.