கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் மிதமிஞ்சிய அளவில் உலோக மாசு கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த ஆற்றின் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.230 கோடி நிதியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என சூழலியல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, பேரூர் வழியாக கோவை நகரில் பாய்கிறது. ஆற்று நீர் நகருக்குள் வந்ததும் மாசுபாட்டின் அளவும் அதிகரிப்பதாக தெரிவிக்கிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன்.
“பருத்திப்பயிர் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதால்தான் கோவையில் பஞ்சாலைகளும், அது சார்ந்த தொழில்களும் வளர்ந்ததற்கு ஒரு முக்கியக் காரணம். குளிர்ச்சியான இந்த தட்பவெட்ப நிலைக்கு இங்கு அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியும், நொய்யல் ஆறும், அதன் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகளும் தான் காரணம்.
சங்ககாலம் முதலே நொய்யல் ஆற்றின் நீர் மேலாண்மை அமைப்பு தனித்துவமானது. ஆற்றில் இருந்து பிரியும் தண்ணீர், ஆறுகள் மற்றும் கிளை ஓடைகளில் பயணித்து ஏரி மற்றும் குளங்களை நிறைத்து மீண்டும் ஆற்றின் முதன்மையான நீர்வழியை வந்தடையும். இந்த அமைப்பு சிதிலமடைந்ததுதான் நொய்யல் மாசடைந்ததற்கு முக்கிய காரணம்” என்கிறார் அவர்.
“ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில்தான் பவானி ஆற்றின் கிளை ஆறான சிறுவாணி கோவை நீராதாரத்தின் முக்கியப் பகுதியாக ஆக்கப்பட்டது. இதனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டுகளும், கிளை ஓடைகளும் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டன. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது. தண்ணீர் இல்லாத காலங்களில் நொய்யல் ஆற்றின் கரையோரங்கள் கட்டடங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன, திடக்கழிவுகளால் நிரப்பப்படுகின்றன.
குடியிருப்புகளின் கழிவு நீரும், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளும் ஓடைகளில் கலந்துவிடப்படுகின்றன. இதன் விளைவாக மழைக்காலங்களில் ஆற்றில் நீர் ஓடும்போது மாசடைந்த தண்ணீர் குளங்களை நிரப்புகிறது. இதனால், நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, குளத்தில் வசிக்கும் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.
நொய்யல் ஆற்று நீர் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அதில் வளரும் மீன்களும், நண்டுகளும் உணவாக விற்கப்படுகின்றன. அதை சாப்பிடும் மனிதர்களுக்கும் கண்டிப்பாக நோய் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது வெளியான ஆய்வு முடிவுகளிலும் நொய்யல் நதி நீர் நச்சுத்தன்மை மிக்கது என உறுதியாகியுள்ளது’ என்கிறார் மணிகண்டன்.
சுமார் 170 கிலோ மீட்டர் நீளமுள்ள நொய்யல் ஆற்றில் 22 அணைக்கட்டுகளும், 31 குளங்களும் உள்ளன. நொய்யல் நீரைப் பயன்படுத்தி 36 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த ஆறு 73 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.
மழை நாட்களில் நகரில் உள்ள குளங்களில் மீன்கள் செத்து மிதப்பதும், அணைக்கட்டுகளை ஒட்டிய பகுதிகளில் வெண்ணிற நுரை உருவாவதும் நொய்யல் நீரின் மாசு குறித்த எச்சரிக்கைகள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை மாணவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்காக, நொய்யல் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மற்றும் நீர் வாழ் உயிரின மாதிரிகளை ஆய்வு செய்ததில் நீரில் மிதமிஞ்சிய அளவில் தீங்கு விளைவிக்கும் அளவில் உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையில், இந்திய தர மதிப்பீட்டின்படி ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டிய தாமிரம் 2.75 மில்லிகிராமும், 0.1 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டிய காரீயம் 10.74 மில்லிகிராமும் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 45 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டிய நைட்ரேட் 250 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டிய அம்மோனியா 0.50 மில்லிகிராமும், 200 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டிய கடினத்தன்மை 1075 மில்லிகிராமும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் மனிதர்களுக்கு தோல் வியாதிகள், புற்றுநோய், வயிறு மற்றும் குடல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை கடக்கும் நொய்யல் ஆறு பின்னலாடை தொழில் நகரமான திருப்பூருக்குள் நுழைகிறது. இம்மாவட்டத்தில் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்றில் ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஈஸ்வரன்.
“1980களில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள ஆறுகள் மாசடைந்து மக்களுக்கு வியாதிகள் ஏற்பட்டன. ஆற்று நீரை பரிசோதித்ததில் சாயக்கழிவுகள் அதிக அளவு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சாயப்பட்டறைகள் மூடப்படுகின்றன. ஆனால், ஆடைகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது. அப்போது தான் பன்னாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்று ஓரத்தில் சாயப்பட்டறைகளை உருவாக்குகின்றன. இதில் லாபம் கிடைப்பதை தெரிந்துகொண்ட உள்ளூர் வியாபாரிகள் மேலும் பல சாயப்பட்டறைகளை தொடங்கினர். திருப்பூரில் வணிகமும், ஏற்றுமதியும் அதிகரித்தது. மறுபுறம் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆறு நச்சுத் தன்மைமிக்க சாக்கடையாக மாறிவந்தது.
நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டு சில ஆண்டுகளில் அது சாயக்கழிவு நீர் குட்டையாக மாறியது. அணைகட்டால் பயன்பெற வேண்டிய விவசாயிகள் அணையைத் திறக்க வேண்டாம் என போராடியதும் இங்கு தான் நடந்தது, உலக வரலாற்றில் வேறெங்கும் நடந்ததில்லை”.
“பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு சாயத் தொழிற்சாலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் சாயக்கலவைகள் அகற்றப்பட்டு மாசில்லாத நீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆற்று நீரை மாசுபடுத்தாத வகையில் ஜீரோ வேஸ்ட் முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், சில தொழிற்சாலைகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. முன்பைவிட இப்போது நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுகளின் அளவு திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே சாயப்பட்டறைகள் அத்துமீறி செயல்படுகின்றன. குறிப்பாக, கோவையில் இருந்து வரும் நீரில் உலோகக்கழிவுகள் அதிகம் கலக்கப்படுவதால் விவசாயத்திற்கு இந்த நீரைப் பயன்படுத்துவதில்லை, நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படுகிறது’ என கூறுகிறார் இவர்.
கடந்த மே மாதம் பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் நொய்யல் ஆற்று அமைப்பில் 158.35 கி.மீ வரை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
தமிழக அரசு அறிவித்துள்ள நொய்யல் ஆறு சீரமைப்புத் திட்டத்தில் கான்க்ரீட் கரைகள் கட்டுவதற்கான திட்டங்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான திட்டம் தான் தற்போதைய தேவை என்றும் கூறுகிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன்.
‘நொய்யல் ஒரு பருவகால ஆறு. மழைப்பொழிவு இருக்கும் காலங்களில் மட்டுமே ஆற்றிலும், அதன் ஓடைகளிலும் நீர் பெருகும். பேரூர் வரை ஓரளவுக்கு ஆறு சுத்தமாக உள்ளது. பேரூர் அணைக்கட்டை கடந்ததும் நகரக் கழிவுகளையும், தொழிற்சாலை கழிவுகளையும் சுமந்து வரும் மாசடைந்த ஆறாக இது மாறுகிறது. திருப்பூர் மாவட்டத்தை கடக்கையில் சாயக்கழிவுகளும் கலந்துவிடுகின்றன. குடியிருப்புகளில் இருந்து வரும் திடக்கழிவுகள் குளங்களில் கொட்டப்படுகின்றன. சரியான பாதாளச் சாக்கடை திட்டமில்லாததால் சாக்கடை நீர் குளங்களுக்குள் செல்கிறது’
‘நொய்யல் ஆற்றை மீட்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.230 கோடியில் ஆற்றிலும், அதன் வழியிலும், நீர்நிலைகளிலும் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கான எந்த திட்டமுமில்லை. குளத்தை சுற்றி மற்றும் ஓடையின் கரைகளில் கான்கிரீட் சுவர்கள் கட்டவும், சேதமடைந்த அணைக்கட்டுகளை சீரமைக்கவும் மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தன்னார்வலர்கள் முறையிடுகையில் நதி நீர் சார்ந்த மற்றொரு திட்டத்தில் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நீர் நிலைகளைச் சுற்றி கான்கிரீட் சுவர் கட்டுவதால் உயிர்ச் சூழல் பாதிக்கப்படுகிறது. இயற்கையாக அமைந்த குளக்கரையில் பல்லுயிர்கள் வாழ்கின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் குளங்களுக்கு வருகின்றன. கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்படுவதால் இந்த உயிர் சூழல் மொத்தமாக பாதிக்கப்படும்.’
‘குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆறு மற்றும் அதன் நீர்நிலைகளில் கலக்காமல் இருக்க வழி வகுத்தல், கழிவுநீர் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏரி மற்றும் குளங்களை தூர் வாருதல் போன்ற ஆக்கப்பூர்வமான சீரமைப்புப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே, நஞ்சாக மாறிவரும் நொய்யல் ஆற்றை மீட்பதற்கான உண்மையான திட்டமாக இருக்கும்’ என தெரிவிக்கிறார் காளிதாசன்.
கடந்த ஜுன் மாதம் நொய்யல் ஆறு சீரமைப்புக்கான பணிகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்தில் ஆற்றின் கரைகள் கான்கிரீட் சுவர்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் சேதமடைந்த அணைக்கட்டுக்களை மீண்டும் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.