பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ரொனால்டினோ கடந்த 2018 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2002 இல் பிரேஸில் அணி, 5 வது முறையாகக் கால்பந்து உலகக் கிண்ணத்தை வெல்ல உதவினார்.
தென் அமெரிக்க நாடான பராகுவேக்கு கடந்த மார்ச் மாதம் பிரேஸிலைச் சேர்ந்த ரொனால்டினோவும், அவரது சகோதரா் ராபா்டோவும் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றார்கள். அப்போது கடவுச்சீட்டை சோதனை செய்த அதிகாரிகள் அவா்களை நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனா்.
எனினும், பின்னா் கடவுச்சீட்டு போலியானது என்பதை கண்டறிந்த அதிகாரிகள், ரொனால்டினோவையும், அவரது சகோதரரையும் தங்கும் விடுதியில் கைது செய்தனா். 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ரொனால்டினோ கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: பெலோ ஹரிஸாண்டி பகுதியில் நேற்று முதல் உள்ளேன். ஒரு நிகழ்ச்சிக்காக வந்தேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் அறிகுறிகள் எதுவும் இன்றி உள்ளேன் என்று கூறியுள்ளார்.