அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் ஆர்க்டிக் கடல் பகுதியில் புதைந்துள்ள கார்பன் சுழற்சியின் தூங்கும் பூதம் என அழைக்கப்படும் உறைந்த மீத்தேன் வாயு வெளிவர ஆரம்பித்திருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தில் புவி வெப்பமயமாதல் பெரும்பங்கு வகித்து வருகிறது. அதிகப்படியான கார்பன் வாயுக்களின் வெளியேற்றம் புவியின் வெப்பத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு அருகிலுள்ள லாப்டேவ் கடலில் 350 மீட்டர் ஆழத்திற்கு அதிக சக்தி வாய்ந்த பசுமைக்குடில் வாயு கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது உலகளாவிய வெப்பமயமாதலை மேலும் துரிதப்படுத்த வாய்ப்புள்ளதால் விஞ்ஞானிகள் அச்சமடைந்துள்ளனர். ஆர்க்டிக் கடலின் கிழக்கு சைபீரியக் கடலின் ஆழமற்ற பகுதிகளில் பெரிய அளவிலான உறைந்த மீத்தேன் மற்றும் பிற வாயுக்கள் உள்ளன. கார்பன் டை ஆக்சைடைக் காட்டிலும் 80 மடங்கு செறிவான இந்த மீத்தேன் வாயுவானது வெப்பமயமாதலில் பெரும்விளைவை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உறைந்த மீத்தேன் வாயு தற்போது கடலில் கரைந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள ரஷ்ய ஆராய்ச்சி கப்பலான ஆர் / வி அகாடெமிக் கெல்டிஷ் கப்பலில் உள்ள பன்னாட்டு ஆய்வுக்குழு, இது கடல் மேற்பரப்பில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அளவை விட நான்கு முதல் எட்டு மடங்கு அதிகமாக உள்ளது என எச்சரித்துள்ளது.
ஆர்க்டிக் வெப்பநிலை இப்போது உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்து வருவதால், தற்போது மீத்தேன் வாயுவின் கசிவு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
சைபீரியாவில் வெப்பநிலை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சராசரியை விட 5 செல்சியஸ் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.