நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மாசை தடுப்தபற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசடைந்து டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புகை மண்டலம் உருவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்று தரக் குறியீடு அபாய அளவை தாண்டியே இருந்தது.
ஆனந்த் விகார் பகுதியில் 401 புள்ளிகளாகவும், அலிப்பூரில் 405 புள்ளிகளாகவும், வசீர்பூரில் 410 புள்ளிகளாகவும் இருந்தது.