நடிகை ராய் லட்சுமி தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வருகிறார். ‘காஞ்சனா’ பேய் படத்தில் லாரன்சுடன் நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
பின்னர் ‘அரண்மனை’ படத்தில் நடித்தார். அதுவும் வெற்றிபெற்றது. தற்போது ‘சவுகார்பேட்டை’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதில் முதல் தடவையாக பேயாகவே வருகிறார். பேய் படங்களில்
நடிப்பது குறித்து ராய் லட்சுமி அளித்த பேட்டி வருமாறு:-
நான் நடித்த பேய் படங்கள் வெற்றிபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆவி படங்கள் எனக்கு அதிர்ஷ்டமான படங்களாக அமைகின்றன. ‘சவுகார்பேட்டை’ என்ற பேய் படத்தில் இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதில் கிராமத்து பெண் வேடம் ஆனாலும் வெவ்வேறு பரிமாணங்களில் வருகிறேன். அதில் ஒன்று பேய் வேடம். இந்த படம் எனக்கு பெரிய சவாலாக அமைந்தது. கஷ்டப்பட்டு நடித்தேன்.
பேய் படங்களில் நடித்தாலும் எனக்கு பேய் நம்பிக்கை கிடையாது. கடவுளை மட்டுமே நம்புகிறேன். ஆனாலும் சில அமானுஷ்ய சம்பவங்களை கண்டு நான் பயந்து இருக்கிறேன். ‘அரண்மனை’ படத்தில் நடித்தபோது என்னை சுற்றி ஏதோ சில அதிர்வுகள் தென்படுவதாக உணர்ந்தேன். சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பத்தாவது மாடியில் தங்கி இருந்தேன். இரவு நேரத்தில் ஜன்னலுக்கு வெளியே பளிச் பளிச் என வெளிச்சம் தெரிந்தது. அப்போது மழை இல்லை மின்கோளாறும் ஏற்படவில்லை.
அதோடு ஜன்னலில் ஓங்கி அடிக்கும் சத்தமும் கேட்டது. பேய் படங்களில் நடிப்பதால் ஏற்பட்ட பீதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சத்தம் தொடர்ந்தது. வெளிச்சமும் வந்து கொண்டே இருந்தது. இதனால் ரொம்ப பயந்து போனேன். உடனடியாக போனில் ஓட்டல் காவலரை அழைத்தேன். மூன்று பேர் வந்தனர். அவர்களிடம் விவரம் சொன்னேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் என் அறைக்கு வெளியே இரண்டு பாதுகாவலர்களை நிறுத்தி வைப்பதாக சொன்னார்கள். அன்று ரொம்பவும் பயந்து போனேன். இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.