கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பின்னர், அதாவது சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை), பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 10,000 யாத்ரீகர்கள் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கிராண்ட் மசூதியின் மையத்தில் உள்ள இஸ்லாத்தின் புனிதமான தலமான காபாவைச் சுற்றிவர அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, வெளிநாட்டு யாத்ரீகர்கள் சௌதி அரேபியாவுக்கு வந்த பின்னர் மூன்று நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சௌதி அரேபியாவை சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனர். சௌதியில் படிப்படியாக பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து அந்த நாடு அரசாங்கம் படிப்படியாக அங்குள்ள மசூதிகளையும் திறந்து வருகிறது.
சௌதி அரேபியாவில் இதுவரை 3,47,282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5,402 பேர் உயிரிழந்துள்ளனர்.