பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – கே.கே. செந்தில் குமார்.
அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920 களில் நடைபெறுகிறது.
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீம் வேடத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆரின் முதல் தோற்ற விடியோ கடந்த மாதம் வெளியானது. அதில் ஜூனியர் என்டிஆர், இஸ்லாமியரைப் போல உடை அணிந்துள்ள காட்சி இடம்பெற்றது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநில பாஜக தலைவரும் எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமார், ஆர்ஆர்ஆர் படம் பற்றி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளதாவது:
பரபரப்புக்காக கொமரம் பீம் தலையில் தொப்பியை அணிய வைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இதை நாங்கள் வேடிக்கை பார்ப்போமா? கிடையாது. கொமரம் பீமைக் குறைவாக மதிப்பிட்டோ ஆதிவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் உணர்வுகளையும் தாழ்த்தி படம் எடுத்தாலோ உங்களைக் கம்புகளைக் கொண்டு அடிப்போம். திரையரங்கில் அதே காட்சியுடன் படத்தை வெளியிட்டால் படம் ஓடும் ஒவ்வொரு திரையரங்கையும் எரிப்போம். ராஜமெளலிக்குத் தைரியம் இருந்தால் இஸ்லாமியத் தலைவரையோ நிஜாம் ஆட்சியில் இருந்த நவாப்பையோ காவி உடை அணியவைத்து, நெற்றித் திலகத்துடன் படம் எடுக்க முடியுமா என்று பேசியுள்ளார்.