சார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி ஆதரவுடன் நடக்கிறது. 39-வது ஆண்டாக இந்த கண்காட்சி சார்ஜா கண்காட்சி மையத்தில் நேற்று தொடங்கியது.
இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்து வருகிறது. ‘சார்ஜாவில் இருந்து வாசிக்கும் உலகம்’ என்ற கருப்பொருளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கிறது.
இந்த கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்கள் registration.sibf.com என்ற இணையதளம் மூலம் முன் அனுமதி பெற வேண்டும். தினமும் இந்த கண்காட்சியை பார்வையிட 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பார்வையிட பொதுமக்கள் நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த கண்காட்சியில் அமீரகம், ஓமன், எகிப்து, சவுதி அரேபியா, லெபனான், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஈராக் உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்த 1,024 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வழக்கமாக பங்கேற்கும் நிறுவனங்களை விட இந்த ஆண்டு புத்தக நிறுவனங்கள் ஓரளவு குறைந்து காணப்பட்டது. இந்தியாவை சேர்ந்த புத்தக நிறுவனங்களும் பெருமளவு குறைந்து பங்கேற்றுள்ளன.
கேரளாவை சேர்ந்த சில புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. ஒவ்வொரு நாளும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் டிஜிட்டல் முறையில் நடக்க இருக்கிறது. இதனால் நேரில் நிகழ்ச்சியில் பார்வையிடுவது தவிர்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
பொது நிகழ்ச்சி எதுவும் நடைபெறாது. சமூக வலைத்தளம் மூலம் புத்தக கண்காட்சி குறித்த தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பள்ளிக்கூட குழந்தைகள் இந்த கண்காட்சியை பார்வையிட குழுவாக அழைத்து வரப்பட மாட்டார்கள்.
சார்ஜா போலீஸ் துறையின் தலைவர் சைப் அல் ஜாரி அல் சம்சி, சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது பின் ரக்காட் அல் அமெரி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள் இந்த கண்காட்சியை நேற்று பார்வையிட்டனர். இந்த கண்காட்சி வருகிற 14-ந் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடக்கிறது.