அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அபுதாபி பகுதிக்குள் நுழைய ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அபுதாபி நகருக்குள் நுழைய வருகிற 8-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகிறது.
இதன்படி அபுதாபி பகுதிக்குள் பிற அமீரகத்தில் இருந்து நுழைய விரும்புவோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை பெற்ற 48 மணி நேரத்துக்குள் அங்கு செல்ல வேண்டும்.
அபுதாபி நகருக்குள் ஒருவர் என்றைக்கு நுழைகிறாரோ அந்த நாள் முதலாவது நாளாக கணக்கிடப்படும். அதன் பின்னர் அங்கு வந்துள்ளவர் தொடர்ந்து 4 நாட்கள் தங்கியிருந்தால் 4-வது நாளும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் தொடர்ந்து தங்கியிருக்கும் பட்சத்தில் 8-வது நாளும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த விதிமுறைகள் அமீரகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அமீரக குடியிருப்பு விசா பெற்றுள்ளவர்களுக்கும் பொருந்தும். மேலும் அபுதாபி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு சென்று விட்டு திரும்பும் போது இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
அபுதாபி பகுதிக்குள் நுழைந்தவர்கள் 4 மற்றும் 8-வது நாட்களில் கொரோனா பரிசோதனை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகளில் இருந்து கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்து கொண்ட தன்னார்வலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.