சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் – ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ சமீபத்தில் வெளியானது. இதில் சிம்பு கழுத்தில் பாம்பு இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
மேலும் படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பைப் பிடிக்கும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பை சிம்பு தனது கையால் பிடித்து சாக்குப்பையில் போடும் விடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த விடியோ தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு பாம்பைத் துன்புறுத்தியதாகவும் வன பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. படப்பிடிப்பில் வன உயிரினங்களைப் பயன்படுத்துவதற்கு விலங்கு நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற விதிகளை மீறியுள்ளார்கள்.
பாம்பின் வாய் தைத்து துன்புறுத்தப்பட்டுள்ளது. எனவே சிம்பு உள்ளிட்ட ஈஸ்வரன் படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிண்டி வனத்துறை அலுவலகத்தில் வன ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவை மத்திய விலங்கு நல வாரியத்துக்கும் அனுப்பியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு மற்றும் படக்குழுவினரிடம் விசாரணை நடைபெறவுள்ளது.