அமெரிக்காவே நாளைய ஜனாதிபதி ஜோ பிடன் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்க, 2 நாள்களாக கோல்ஃப் திடலில் தான் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.
ஜோ பிடன் வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தநிலையில் சனிக்கிழமை வர்ஜீனியாவிலுள்ள ஸ்டெர்லிங் கோல்ப் திடலுக்கு விளையாட வந்தார் ஜனாதிபதி டிரம்ப்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு எல்லாம் கோல்ப் திடலுக்கு அவர் வந்துவிட்டார்.
டிரம்ப் வரும் வழியில் போராட்டக்காரர்கள் திரண்டு டிரம்ப்க்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஜோ பிடனின் வெற்றியை இன்னமும் ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தல் நடைமுறையில் பரவலாக முறைகேடுகள் நடந்ததாக ஆதாரங்களேதுமின்றித் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்.
கோல்ஃப் விளையாட்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிவந்தபோதும், டிரம்ப்க்கு எதிராக மக்கள் முழக்கமிட்டனர்.
கோல்ப் திடல் நுழைவு வாயில், வெள்ளை மாளிகைத் திடல் வாசல்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு கோஷமிட்டனர்.
தோற்றுப் போன நிலையிலும் அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், அங்கிருந்த மக்களைக் கண்டு, தம்ஸ் அப் வெற்றிச் சின்னத்தைக் காட்டினார்.
இதனிடையே, சனிக்கிழமை இரவு வெற்றிக்கொண்டாட்டங்களுக்குப் பிறகு, வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை தோவாலயத்துக்கு வழிபடச் சென்றார் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன்.
டெலவேரிலுள்ள வில்மிங்டனில் தம்முடைய இல்லத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்குச் சென்று ஆராதனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
பின்னர், குடும்பத்தினருடன் சென்று, தேவாலய வளாகத்திலுள்ள, மறைந்த அவருடைய மகன் போவ்வின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். டெலவேரின் அட்டர்னி ஜெனரலாக இருந்த போவ், மூளைப் புற்றுநோய் காரணமாக, 2015 இல் இறந்தார்.