திருச்சியில் குளிர்சாதன வசதியில்லாத திரையங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க திரையரங்குகளை மூட மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. நவ.10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தன. இதையடுத்து, திரையரங்குகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
தயாரிப்பாளர்களின் அறிவிப்பால் புதுப்படங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான தியேட்டர்களில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி திரையிடப்படவில்லை. திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கத்தில் உரிமைக்குரல் திரையிடப்பட்டது.
3 நாள்களுக்கு இந்த படம் திரையிடப்படுகிறது. தீபாவளி முதல் தெலுங்கு ரீமேக் படம் (நந்து) திரையிடப்படவுள்ளது.
இதேபோல, மாநகரில் 4 திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை படங்கள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் நின்று டிக்கெட் பெற்றனர். கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட்டது. இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். பேலஸ் திரையரங்க உரிமையாளர் சந்திரசேகர் கூறுகையில், திருச்சியில் 4 தியேட்டர்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்றார்.