திரையரங்குகளில் தீபாவளியன்று வெளியான பிஸ்கோத் படத்தை முதலில் ஓடிடியில் தான் வெளியிட முடிவு செய்திருந்தோம் என நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் – பிஸ்கோத். தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா, ஆடுகளம் நரேன், செளகார் ஜானகி போன்றோர் நடித்துள்ளார்கள். தீபாவளி தினத்தன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
பிஸ்கோத் படத்தைத் திரையரங்கில் வெளியிட்டது பற்றி நடிகர் சந்தானம் கூறியதாவது:
இப்படத்தை முதலில் ஓடிடில் தான் வெளியிட முடிவு செய்தோம். ஆனால், இயக்குநர் ஆர். கண்ணன் சிறிது காலம் காத்திருக்கலாம், திரையரங்கிலேயே வெளியிடலாம் என்று கூறினார். அவர்தான் இப்படத்தைத் தயாரித்தும் இருக்கிறார்.
தீபாவளியன்று வெளியானதும் ரசிகர்களைக் காண திரையரங்கிற்கு சென்றேன். அங்கு வந்தவர்கள் அனைவரும் எனது ரசிகர்கள் தான். அவர்களுக்கு கைக்கூப்பி எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் எங்களை ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். இவையெல்லாம் திரையரங்கில்தான் கிடைக்கும், ஓடிடியில் கிடைக்காது.
ரசிகர்கள் பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றி 2 வாரங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென்றால், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம்.
மேலும், சரியான படம் எடுக்கவில்லையென்றால் இயக்குநரோ, நடிகரோ யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள். அதேபோல் படத்தின் வெற்றியைப் பொறுத்து சம்பளம் வேறுபடும். அதற்கேற்ப நடிகர்களும் அனுசரித்து தான் போவார்கள். யாரும் நான் நடித்து விட்டேன், என் சம்பளம் வந்தால் போதும் என்று இருக்க மாட்டார்கள்.
அரசியலுக்கு வர மாட்டேன். பாஜகவில் நான் இணையப் போவதாக வந்த செய்தி தவறானது என்றார்.