“உடை இல்லாமல் ப்ரீயாக இருக்கும் கலாசாரம்” இயற்கையுடன் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜெர்மானியர்கள் நிர்வாணமாகச் சூரியக் குளியல் எடுக்கிறார்கள், உடைகளைக் களைந்துவிட்டு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள், தொப்பி மட்டும் அணிந்து நீண்டதூர நடைப்பயணமும் செல்கிறார்கள்.
பெர்லின் நகரில் 4 ஆண்டுகள் வாழ்ந்ததில், எதையும் உத்வேகத்துடன் செய்தல் என்ற ஜெர்மனி மக்களின் பழக்கத்தை நானும் கற்றுக்கொண்டேன். நான் வளர்ந்த மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியில் இருந்ததைக் காட்டிலும், நிர்வாணத்தில் இந்த மக்களின் சாதாரண மனப்போக்கு பழகிவிட்டது.
அமெரிக்கப் பிரதான கலாசாரத்தில் நிர்வாணம் என்பது பொதுவாக பாலியல் சார்ந்ததாகக் கருதப்படும் நிலையில், இங்கே ஜெர்மனியில் உடைகளைக் களைவது என்பது சில தினசரி சூழ்நிலைகளில், அசாதாரணமான விஷயமாகக் கருதப்படுவது இல்லை. நீராவிக் குளியலில், நீச்சல்குளத்தில் குளிப்பதில் நிர்வாணமாகச் செல்வது எனக்குப் பழக்கமாகிவிட்டது. மசாஜ் தெரபிக்கு சென்ற இடத்தில், சிகிச்சைக்கு முன்னதாக அவர் சொல்லாமலே நான் உடையைக் கழற்றியதைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். அமெரிக்கர்களைப் பொருத்தவரை, உடைகளைக் கழற்றுமாறு சொன்னால் தான் கழற்றுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால், வழக்கமாக சொல்லப்படுவதைப் போல, முதன்முறையாக பொது இடத்தில் நிர்வாணத்தைப் பார்த்ததை ஒருபோதும் நீங்கள் மறந்துவிட முடியாது. பெர்லினில் தெற்கில் நெயுக்கோல்ன் மாவட்டத்தில் ஹசென்ஹெய்டே என்ற பூங்காவில் ஜாக்கிங் சென்றபோது, பொது இடத்தில் சிலர் நிர்வாணமாக இருப்பதை முதன்முறையாகப் பார்த்தேன். மதிய நேர வெய்யிலில் சிலர் நிர்வாணமாக படுத்து சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிறகு, நண்பர்களுடன் பேசிய பிறகும், கூகுளில் தகவல்களை தேடிப் பார்த்த பிறகும், இயற்கைச் சூழலில் அமைந்த சொகுசு வளாகங்களிலும், நகரின் பூங்கா அல்லது கடற்கரையிலும் நிர்வாண நபர்களைப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தது.
நான் பார்த்தது மனமகிழ்ச்சிக்காகக் கூடும் இடம் கிடையாது. உடைகள் இல்லாமல் உடலை ப்ரீயாக வைத்துக் கொள்ளும் கலாசாரத்தின் உதாரணமாக அது இருக்கிறது. சுருக்கமாக அதை எப்.கே.கே. எனக் குறிப்பிடுகிறார்கள். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் (கிழக்கு ஜெர்மனி அல்லது `ஜி.டி.ஆர்.’) மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாகப் பழகிவிட்ட விஷயமாக இது இருக்கிறது. ஜெர்மனியில் பொது இடங்களில் நிர்வாணமாக இருக்கும் பழக்கம் 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே இருந்து வருகிறது. ஸ்பெயினில் கடற்கரையில் உடலின் மேல் பகுதியில் உள்ள உடைகளைக் களைவது போல அல்லாமல், எப்.கே.கே. என்பது இயற்கை சூழ்ந்த உலகில் உடலின் தோலை முழுமையாக வெளிக்காட்டும் வகையில் முழுமையாக உடைகளைக் களைவது என்று ஜெர்மனியில் உள்ளது. வரலாற்று ரீதியில் இது தளர்வைத் தருவதாகவும், நோய் எதிர்ப்பை உருவாக்குவதாகவும் உள்ளது.
“ஜெர்மனியில் நிர்வாணம் என்பதற்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது” என்று பெர்லினில் பிரெய்யே பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுத் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் அர்ன்ட் பாவெர்கம்பெர் கூறுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், “வாழ்க்கை சீர்திருத்தம்” ஏற்பட்டது. ஆர்கானிக் உணவு, பாலியல் விஷயங்களில் விடுதலை சிந்தனை, மாற்று மருத்துவம், இயற்கையுடன் நெருக்கமாக எளிமையான வாழ்க்கை என்ற விஷயங்களைக் கொண்டதாக அது இருந்தது. “இந்த பரவலான இயக்கத்தின் ஓர் அங்கமாக நிர்வாணத்துவம் இருக்கிறது. இது நவீன தொழில் மயத்திற்கு எதிரானதாக இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான புதிய சமுதாயத்திற்கு எதிரானதாக இருக்கிறது” என்று பாவெர்கம்பெர் தெரிவிக்கிறார்.
வாழ்க்கையை ரொமாண்டிக்காக ஆக்குகிறது என்று இருந்தாலும், பெர்லின் உள்ளிட்ட பெரிய நகரங்களில் இந்த சீர்திருத்த இயக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று போட்ஸ்டாம் நகர தற்கால வரலாறு குறித்த லெய்ப்னிஜ் மையத்தில் வரலாற்றாளராக இருக்கும் ஹன்னோ ஹோச்முத் தெரிவித்துள்ளார். வெய்மர் காலக்கட்டத்தில் (1918 – 1933) எப்.கே.கே. கடற்கரைகளில் சூரியக் குளியல் எடுப்பவர்கள் எண்ணிக்கை, “மிக மிகக் குறைவாகவே” இருந்துள்ளது. நகர்ப்புற மக்கள் மட்டுமே அதில் நாட்டம் காட்டினர். “அதிகார எண்ணம் கொண்ட சமுதாயம் மற்றும் ஜெர்மன் அரசாட்சியின் (1871 முதல் 1918 வரை) திணிக்கப்பட்ட அடிப்படைவாத கட்டுப்பாடுகளில் இருந்தும் புதிய விடுதலை கிடைத்தது போன்ற உணர்வு தருவதாக இருந்தது” என்று பாவெர்கம்பெர் கூறுகிறார்.
1926 ஆம் ஆண்டில், ஆண், பெண் என இரு தரப்பினரும் நிர்வாணமாக இருக்கும் சூழலை பெர்லின் நிர்வாணத்துக் கல்லூரி ஊக்குவித்தது என்று ஆல்பிரேட் கோச் கண்டறிந்துள்ளார். வெளிப்பகுதியில் நிர்வாணமாக இருப்பது, இயற்கையுடன் இயைந்த நிலையை ஏற்படுத்துவதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கிறது என்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் எப்.கே.கே. முறைக்கு நாஜி அரசு தடை விதித்தது. ஒழுக்க நெறியற்ற செயல் என அந்த அரசு அதைக் கருதியது. 1942 ஆம் ஆண்டில், பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இருந்தாலும், நாஜிகளால் இன அழிப்புக்கு ஆளான யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் போன்றவர்களுக்கு இந்தச் சலுகைகள் அளிக்கப்படவில்லை.
ஆனால் சில தசாப்தங்கள் கழித்து, கிழக்கு மற்றும் மேற்கு என, போருக்குப் பிந்தைய ஜெர்மன் பிரிவினைக்குப் பிறகு உண்மையில் எப்.கே.கே. அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நகர்ப்புற மக்கள் நிர்வாணமாக இருப்பதற்கு கிழக்கு ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. பயணம், தனிப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் நுகர்பொருள்கள் விற்பனை போன்றவற்றுக்குக் கட்டுப்பாடுகள் மிகுந்த கம்யூனிஸ்ட் ஜி.டி.ஆர். பகுதியில் வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு, எப்.கே.கே. என்பது “பாதுகாப்பு வால்வு” போல குறைவாகவே சாத்தியமானது.என்று பாவெர்கம்பெர் கூறுகிறார். தீவிர கட்டுப்பாடுகள் மிகுந்த அரசாங்கத்தில் மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக, கொஞ்சம் “தாராளமாக இருக்கும்” வகையிலான செயலாக அது இருந்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.
கிழக்கு பெர்லினில் வளர்ந்த ஹோச்முத் தன் பெற்றோர்களுடன் கடற்கரைகளுக்குச் சென்றபோது நிர்வாண காட்சிகளைப் பார்த்திருக்கிறார், இந்தக் கருத்தை அவர் ஒப்புக்கொள்கிறார். “ஒரு வகையிலான மன விடுதலையாக அது இருந்தது” என்று அவர் கூறியுள்ளார். “[கிழக்கு ஜெர்மானியர்கள்] கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த விதிகளுக்கு ஆட்பட்டிருந்தனர். என்ன செய்ய வேண்டும், கட்சிப் பேரணிகளுக்குச் செல்வது அல்லது வார இறுதி நாட்களில் ஊதியம் இல்லாமல் சமுதாயப் பணிகள் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் இருந்தன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.டி.ஆர். பகுதியில் ஆரம்ப கட்டத்தில் வெறும் தோலுடன் சூரியக் குளியல் எடுப்பது தொடர்ந்த நிலையில், காவல் துறையினர் குறித்த அச்சமும் இருந்தது. 1971-ல் எரிக் ஹோனேக்கர் ஆட்சியில் எப்.கே.கே.-வுக்கு அதிகாரப்பூர்வமாக மீண்டும் அனுமதி கிடைத்தது. ஹோனேகர் ஆட்சியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில் தாராள சிந்தனைகள் அனுமதிக்கப்பட்டன, வெளிப்புற உலகிற்கு உகந்த வகையில் காட்டிக் கொள்ளும் வகையில் அவை அமைந்தன என்று பாவெர்கம்பெர் தெரிவித்துள்ளார்.
ஜி.டி.ஆர். பகுதியைப் பொருத்த வரையில், `ஓ.கே. நாங்கள் நிர்வாணத்தை அனுமதிக்கிறோம், ஊக்குவிக்கவும் செய்கிறோம், நாங்கள் தாராள சிந்தனை சமுதாயமாக இருக்கிறோம்’ என்று கூறுவது இயல்பாகிவிட்டது என்று பாவெர்கம்பெர் குறிப்பிட்டுள்ளார்.
பெரியதாக இருந்த மேற்கு ஜெர்மனியுடன் 1990-ல் கிழக்கு ஜெர்மனி இணைந்து, முன்னாள் கம்யூனிஸ ஆட்சிப் பகுதியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து, பொது இடங்களில் நிர்வாணமாக இருத்தல் குறைந்துள்ளது. 1970கள் மற்றும் 80-களில், பல நூறாயிரம் பேர் நிர்வாணமாக முகாம் மைதானங்கள், கடற்கரைகள், பூங்காக்களில் இருந்தனர். 2019-ல் உடைகள் இல்லாத உடலுக்கான ஜெர்மன் சங்கத்தில் 30 ஆயிரத்துக்கும் சற்று கூடுதலானவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 மற்றும் 60 வயதைக் கடந்தவர்களாக இருந்தனர்.
இருந்தாலும் இப்போது, ஜெர்மன் கலாசாரத்தில், குறிப்பாக, பழைய கிழக்கு ஜெர்மன் கலாசாரத்தில் எப்.கே.கே. என்பது ஒரு தடத்தைப் பதிவு செய்திருக்கிறது. சில நேரங்களில் நிர்வாண நபர்கள் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துவிடுகிறார்கள். பெர்லினில் எப்.கே.கே.வுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஏரி அருகே கடந்த கோடையில், நிர்வாணமாக இருந்த ஒருவர், தன்னுடைய லேப்டாப் வைத்திருந்த பையை எடுத்துச் சென்ற காட்டுப் பன்றியை விரட்டும் இதுபோன்ற செய்திகள் வைரலாகின்றன.
உண்மையில், பொது இடங்களில் உடைகள் இல்லாமல் இருப்பது என்ற எப்.கே.கே. மற்றும் ஜெர்மனியின் நீண்டகால நிர்வாண பாரம்பரியம் என்பது ஒரு வகையில் ஆரோக்கியத்தைத் தருவதாக இருக்கிறது. இப்போதும்கூட எப்.கே.கே. பகுதிகள் இருக்கின்றன. அவை வித்தியாசமாகப் பார்க்கப் படுவதில்லை. ஆரோக்கியத்துக்கான பகுதிகளாக அவை பார்க்கப் படுகின்றன.
Nacktbaden.de என்ற இணையதளத்தில் நிர்வாணமாக சூரியக்குளியல் எடுப்பதற்கு ஜெர்மனியில் உள்ள கடற்கரைகள் மற்றும் பூங்காக்களின் பெரிய பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. நீராவிக் குளியல் மற்றும் மசாஜ் மையங்களில் நிர்வாணமாக இருத்தல் அல்லது ஹார்ஜ் மலைகள், பவேரியன் ஆல்ப்ஸ் போன்ற இடங்களில் அல்லது சக்சோனி-அன்ஹால்ட் காட்டுக்குள் நிர்வாணமாக நீண்டதூர நடைப்பயணம் செல்வதற்கான வசதிகள் இருப்பது பற்றி அந்த இணையதளம் குறிப்பிடுகிறது. அல்லது கொஞ்சம் சம்பிரதாயங்கள் பார்ப்பதாக இருந்தால் FSV Adolf Koch என்ற ஸ்போர்ட்டிங் கிளப் நிர்வாண யோகா, வாலிபால், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் விளையாட்டு வசதிகளை பெர்லினில் அளிக்கிறது.
கிழக்கு ஜெர்மானியர்கள் பலரை இன்னும் இணைக்கும் விஷயங்கள் குறித்து, சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிவிப்பதாக எப்.கே.கே. நடைமுறை இப்போது இருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் எப்.கே.கே. கடற்கரைகளுக்கு செல்லும் காலத்தில் வளர்ந்த சில்வா ஸ்டெர்ன்கோப், இந்தக் கலாச்சாரம், தனது பிள்ளைகளுக்கு எதைக் கற்பிக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது என்றும், சொந்த உடலை வெளிக்காட்டிக் கொள்வதில் திறந்த மனதுடன் இருப்பதற்கான மனநிலையை இது காட்டுகிறது என்றும் கூறுகிறார்.
“கிழக்கு ஜெர்மனியில் என் தலைமுறையினரிடம் இது இன்னும் மிக ஆழமாக வேரூன்றி இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று அந்தப் பெண் கூறினார். “என் பிள்ளைகளுக்கும் இதை உருவாக்க முயற்சிக்கிறேன். உங்கள் சொந்த உடல் அளவில் திறந்த மனதுடன் இருத்தல், நிர்வாணமாக இருப்பதற்கு வெட்கப்படாமல் இருத்தல், உங்களை நிர்வாணமாகக் காட்டிக் கொள்வதற்கு வெட்கப்படாமல் இருக்க கற்பிக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
பாலியல் உணர்வு இல்லாமல் நிர்வாண உடல்களைப் பார்ப்பது, புறத்தோற்றங்களுக்கு அப்பாற்பட்டு பிறரைப் பார்ப்பதற்கு நமக்கு கற்றுத் தருகிறது என்று ஸ்டெர்ன்கோப் கூறினார். இதனால் வெறும் உடலை மட்டும் பார்க்காமல், தனிப்பட்ட நபர்களாக பார்க்கிறோம் என்கிறார் அவர்.
“மக்களை நீங்கள் நிர்வாணமாகப் பார்த்தால், அவர்களின் தோற்றம் பற்றி அதிகம் நினைக்க மாட்டீர்கள்” என்றார் அந்தப் பெண்மணி. “அநேகமாக கிழக்கு ஜெர்மனியில் இது அதிக பரவலாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் வெளித் தோற்றத்தை வைத்து மக்களைப் பற்றி முடிவு செய்ய முயற்சிப்பதில்லை, உள்ளே என்ன இருக்கிறது என எப்போதும் பார்க்க முயற்சிக்கிறோம் என்ற சிந்தனை இருக்கிறது” என்றார் அவர்.