மாா்ச் மாதம் வரை திரைப்படங்கள் சிக்கல் இன்றி திரையிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 8 மாதங்களாக மூடியிருந்த திரையரங்குகள் அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, நவ.10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
எனினும், விபிஎப் கட்டணத்தை திரையரங்க உரிமையாளா்கள் ஏற்கவில்லை என்றால், இனி புதிய படங்களை வெளியிட மாட்டோம் என பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளா் சங்கம் அறிவித்தது.
இதையடுத்து நவம்பா் மாதம் வி.பி.எப். கட்டணம் வசூலிக்கப்படாது என கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், நவம்பா் மாதம் மட்டும் சில திரைப்படங்களை வெளியிட முடிவு செய்து, தீபாவளி நாளன்று சில திரைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் தயாரிப்பாளா்கள், டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்க உரிமையாளா்களின் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாா்ச் மாதம் வரை விபிஎப் கட்டணத்தில் இருந்து கணிசமான சதவீதத் தொகையைக் குறைத்துக் கொள்ள டிஜிட்டல் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
எனவே, மாா்ச் மாதம் வரை புதிய திரைப்படங்கள் சிக்கல் இல்லாமல் வெளியாகும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
அதே நேரம், மாா்ச் மாதம் மீண்டும் ஆலோசித்து விபிஎப் கட்டணம் தொடா்பான பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.