தடுப்பூசி தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்தியா ஓர் அதிகார மையமாகும்.
இந்தியா ஒரு பெரிய நோய் எதிர்ப்புத் தடுப்பு திட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது, உலகின் 60% தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உட்பட, ஆறு பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்டுள்ளது.
கோவிட் -19 க்கு எதிராக 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் லட்சியத்தில் குறை ஒன்றும் இல்லை. இந்த நோய்க்கு எதிராக சுமார் 50 கோடி டோஸ் தடுப்பூசிகளைப் பெறவும் பயன்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 கோடி டோஸ் மருந்து மூலம், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி மக்கள் வரை நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதால், இந்த நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவின் 42 வருட பழமையான நோய் தடுப்புத் திட்டம், உலகிலேயே மிகப் பெரிய திட்டம். இந்த திட்டம் 55 மில்லியன் மக்களை இலக்காக வைத்து இயங்குகிறது.
குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்பிணிப் பெண்கள், 12 நோய்களுக்கு எதிரான, 390 மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்களைப் பெறுகிறார்கள். தடுப்பு மருந்துகளை சேமித்து வைப்பது மற்றும் அது யாருக்கு எங்கு சென்று இருக்கிறது என பின் தொடரும் மின்னணு முறை இந்தியாவில் சிறப்பாக இருக்கிறது.
இருப்பினும், மில்லியன் கணக்கிலான இளைஞர்களுக்கு முதல் முறையாக தடுப்பு மருந்து கொடுப்பது உட்பட, 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பது என்பது, இதுவரை இதற்கு முன் செய்யப்படாத மிகப் பெரிய செயல்முறை என நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் 30 தடுப்பூசிகளில் 5 தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.
அவற்றில் சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதிக்கும் ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி மற்றும் உள்நாட்டிலேயே பாரத் பயோடெக் உருவாக்கிய மருந்தும் அடங்கும்.
உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியை வைத்திருப்பதற்கு தான் முன்னுரிமை என இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் என்னிடம் கூறினார்.
தடுப்பூசிகளில் எது சரிப்பட்டு வருமென தேர்ந்தெடுப்பதில் இருந்து, யாருக்கு முதலில் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பது என அடையாளம் காண்பது வரை, எல்லாமே சவாலானது என்கிறார் நுண்ணுயிரியலாளர் ககந்தீப் கங்.
இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கும் வேலையின் சிரமத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். இந்தியாவில் பாதி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து முடிப்பதற்கே, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவில் சுமார் 27,000 குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்புக் கிடக்குகள் உள்ளன, அங்கு இருந்து தான் தடுப்பூசிகள் எட்டு மில்லியனுக்கும் அதிகமான இடங்களை அடைய முடியும். கிட்டத்தட்ட அனைத்து தடுப்பூசிகளும் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸுக்குள், குளிர்சாதன வசதி கொண்ட குடோன்களின் வழியாகத் தான் கொண்டு செல்ல வேண்டி இருக்கும். இந்த வசதி போதுமானதாக இருக்குமா?
இந்தியாவுக்குப் போதுமான அளவு தானாகவே முடக்கிக் கொள்ளும் ஊசிகள் (Auto Disabled Syringes) தேவைப்படும். அவைதான் தெரியாமல் மறு பயன்பாடு செய்வதன் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்கும். அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த ஆண்டுக்குள் இதுபோன்ற ஒரு பில்லியன் ஊசிகளை தயாரிப்பதாக நாட்டின் மிகப்பெரிய ஊசி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மருத்துவ கண்ணாடி குப்பிகளை சீராக வழங்குவது குறித்து கேள்விகள் உள்ளன. இந்த தடுப்பூசித் திட்டத்தால் உண்டாகும் மருத்துவ கழிவுகளை பெருமளவில் அகற்றுவது பற்றி என்ன யோசனை இருக்கிறது?
சுமாராக 4 மில்லியன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், இந்தியாவின் நோய் தடுப்பு மருந்து திட்டத்தை செயல்படுத்துவார்கள், ஆனால் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணிக்கு இன்னும் நிறைய பேர் தேவை.
கிராம புற இந்தியாவுக்கு, நாம் எப்படி நம் எல்லா வளங்களையும் பயன்படுத்த முடியும் என நான் யோசிக்கிறேன் என்கிறார், இந்தியாவின் முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா.
அடுத்த வருடம், கொரோனா தடுப்பு மருந்து சப்ளை போதுமான அளவுக்கு தாராளமாக இருக்காது. யாருக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்பதை தீர்மானிப்பதில்தான் சூட்சமமே இருக்கிறது.
அரசு மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மற்ற துறை சார்ந்த முன்னணிக் களப் பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்கிறார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
அப்படி தடுப்பு மருந்தைக் கொடுப்பது அத்தனை சுலபமாக இருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.
நமகு எப்போதுமே போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்து இருக்காது. யாருக்கு முதலில் தடுப்பு மருந்து கொடுப்பது என்பதில் ஒரு மிகப் பெரிய சவால் இருக்கிறது என தொற்று நோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா கூறுகிறார்.
இதைக் கவனியுங்களேன். ஒரு நாட்டில் சுகாதாரப் பணியாளர்களின் பெரும்பகுதி தனியாராக இருக்கும் போது, ஒரு தனியார் சுகாதார ஊழியருக்கு அரசு சுகாதார ஊழியரை விட முன்னுரிமை கொடுக்கப்படுமா? ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் நபர்களை விட, நிரந்தர ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமா?
வயதானவர்கள் (நாள்பட்ட மருத்துவ நிலைகளைக் கொண்டவர்கள்) கொரோனா தடுப்பு மருந்துக்கு தகுதியுடையவர்களாக இருந்தால், வெவ்வேறு இணை நோய்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்படும்?
உதாரணமாக, இந்தியாவில் 70 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர். உலகிலேயே இரண்டாவது அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடு இந்தியா. அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை கொடுக்கப்படுமா?
இந்தியாவில் இருக்கும் 30 மாநிலங்களிலும் தடுப்பூசியை வெளியிடுவது சாத்தியமில்லை. எனவே தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து செல்லுமா?
சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற தன்மை பற்றிய கேள்விகள் தவிர்க்க முடியாதவைகளாகின்றன.
கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன், உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை, சரியான நிறுவனங்களுடன், சரியான அளவுக்கு போட்டுக் கொண்டால், இந்தியாவுக்கு போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்து, விரைவாகக் கிடைக்க உதவியாக இருக்கலாம் என்கிறார் வாஷிங்டன்னில் இருக்கும் Centre for Global Development என்கிற அமைப்பில் மருந்து விநியோகத்தைப் பற்றி படிக்கும் பிரசாந்த் யாதவ்.
வழக்கம் போல, தடுப்பு மருந்து திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, கொரோனா தடுப்பு மருந்தில் உறுதியாகக் கிடைக்கும் எனக் கூற முடியாது என்கிறார் பிரசாந்த்.
வழக்கமான நோய்த்தடுப்பு உள்கட்டமைப்பு ஒரு பெரிய தடம் பதித்துள்ளது, ஆனால் இது பெரும்பாலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் கிளினிக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பெரிய அளவிலான வயது வந்தோருக்கான தடுப்பூசி திட்டம் இல்லை. அது தவிர பெரியவர்கள் பொதுவாக அரசாங்க பொது சுகாதார மையங்களில், தொடர்ந்து தங்களுக்கான முதற்கட்ட கவனிப்பைத் தேடுவதில்லை என்கிறார் பிரசாந்த். சரியாக முறைப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் பொது கூட்டமைப்பு தான் இப்போதைக்கு ஒரே வழி என்கிறார் அவர்.
கிரன் மஜும்தார் ஷா மற்றும் நந்தன் நீல்கேனி (இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்) போன்றவர்கள், கொரோனா தடுப்பு மருந்தின் ஒவ்வொரு டோஸையும் பின் தொடர பதிவு செய்ய, இந்தியா ஆதார் அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆதார் அட்டையைத்தான் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அரசு நலத் திட்டங்களைப் பெற பயன்படுத்துகிறார்கள்.
இந்தியா முழுக்க, நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் தடுப்பூசிகளைப் போடும் விதத்தில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அதை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் பிணைக்க வேண்டும் என நீல்கேனி ஒரு செய்தித் தாளிடம் கூறி இருக்கிறார்.
கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதில் ஊழல் செய்வது குறித்து சில கவலைகள் உள்ளன.
கொரோனா தடுப்பு மருந்துக்கு, முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்க்க போலி ஆவணங்களைப் பெறுவது போன்ற மோசடிகளை அதிகாரிகள் எவ்வாறு தடுப்பார்கள்? இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில், போலி தடுப்பூசிகள் விற்கப்படுவதை எவ்வாறு தடுப்பது?
தடுப்பூசிகள் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து இது போன்ற “பாதகமான நிகழ்வுகளை” கண்காணிக்க 34 ஆண்டுகளாக ஒரு கண்காணிப்பு திட்டம் இந்தியாவில் உள்ளது.
ஆனால் பக்க விளைவுகளைக் குறித்து சரியாக புகாரளிப்பதற்கான வரையறைகள் இன்னும் பலவீனமாகவே இருக்கிறது. அதோடு கடுமையான பாதகமான நிகழ்வுகளின் எண்ணிக்கை, இந்தியாவில் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிகக் குறைவாகவே இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாதகமான விளைவுகளைக் குறித்து வெளிப்படையாகப் புகாரளிக்கத் தவறுவது, தடுப்பூசிகளைக் குறித்து அச்சத்தைத் தூண்டுவதற்கு வழிவகுக்கும்.
இது மிகப்பெரிய கேள்வி. அரசாங்கம் அனைத்து மருந்துகளையும் பெற்று, அரசு இலவச அல்லது மானிய தடுப்பூசி திட்டத்தை உருவாக்குமா? அல்லது செல்வந்தர்கள் தங்களுக்குத் தேவையான தடுப்பு மருந்தை சந்தை விலைக்கு தனியார் மூலம் பெறுவார்களா?
தொற்றுநோய் முடியும் வரை ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி போடுவதற்கான மசோதாவை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் லஹரியா போன்ற வல்லுநர்கள் நம்புகின்றனர். கிரண் மஜும்தார் ஷா போன்றவர்கள் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தலாம் என்று கூறுகிறார்கள்.
தொடக்கத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு, ஒரு இந்தியருக்கு 10 டாலர் வரை செலவாகலாம். ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கு 13 பில்லியன் டாலர் வரை செலவாகும் என நீல்கேனி கணக்கிடுகிறார்.
அதனால்தான், இந்தியாவுக்கான ஒரு நல்ல தடுப்பூசி, ஒரு டோஸுக்கு 50 சென்டுக்குக் குறைவாக செலவாக வேண்டும், ஏராளமாகக் கிடைக்க வேண்டும் மற்றும் ஒரே டோஸாக வழங்கப்பட வேண்டும் என்கிறார் ககன்தீப் காங்.