பின்லாந்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் உரிமம் பெற்ற தடுப்பூசி நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒட்டுமொத்த மக்களையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதே பின்லாந்தின் குறிக்கோள். தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். முதல்கட்டமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் தடுப்பூசிகளை விரைவில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டு நாட்டிற்கு வந்தபின்னரே இறுதி அறிவிப்புகள் வெளியாகும்.
எனினும் தடுப்பூசி வந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், முதியவர்களுக்கு வழங்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஆறு வெவ்வேறு தடுப்பூசி விநியோகத்துக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் ஐந்து தடுப்பூசிகளுக்கு பின்லாந்து அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனினும், தடுப்பூசி செயல்பாடு குறித்து முழுவதும் தெரிந்தபின்னர் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மகிழ்ச்சியான நாடாகவும், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடாகவும் பின்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.