உரிய அனுமதி பெறப்பட்ட பின் பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டின அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தடுப்பூசி தயாரிப்பதில் சீனா, இந்தியா, கனடா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனும் கோரிக்கையும் ஒருபக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரேசில் அதிபர் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வெளிவந்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை 66 லட்சத்து 28 ஆயிரத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஜப்பான், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.