20வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல், உலக மக்களை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது.
கரோனா தீநுண்மியின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து நெதா்லாந்து வந்த ஒருவரது உடலில் புதிய ரக கரோனா தீநுண்மி தொற்றியிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
கடுமையானது கரோனா கட்டுப்பாடுகள்
தீவிரத் தன்மை கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, பிரிட்டன் தலைநகா் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நோய் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது:
வேகமாகப் பரவி வரும் புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய ரகத்தைவிட இந்த புதிய ரக தீநுண்மி 70 சதவீதம் அதிக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. பிரிட்டனில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு இந்தத் தீநுண்மி காரணமாக இருக்கலாம்.
முந்தைய தீநுண்மையை விட புதிய ரக கரோனா தீநுண்மி உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கோ, நோய் பாதிப்பை அதிகரிக்க்கும் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை என்றாா் அவா்.
பொதுவாகவே வைரஸ்கள், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அதிகம் பரவுவதும், அது தனது வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்துக் கொள்வதும் வழக்கம். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக வைரஸ் பரவல்கள் நிகழ்கின்றன.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய கரோனா வைரஸ் ஏற்படுத்தும் சிக்கல் என்ன?
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய அதி தீவிர கரோனா தொற்று குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், இந்த கரோனா வைரஸ், பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் மிக வேகமாகவும் மிக எளிதாகவும் பரக் கூடியது என்பதே. ஆனால், இது மிக பயங்கர வைரஸ் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து பிரிட்டன் அறிவியல் மூத்த ஆலோசகர் பாட்ரிக் வால்லன்ஸி கூறுகையில், புதிய கரோனா வைரஸ் மிக வேகமாக நகர்கிறது, அதிக தாக்கம் கொண்டதாகவும் தெரிகிறது. இதனால், லண்டனில் கரோனா பாதிப்பு 60 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் இந்த புதிய அதிதீவிர கரோனா வைரஸில் சுமார் 12க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் காணப்படுகின்றன. சில வைரஸ்கள் மனித உடலில் இருக்கும் புரதத்துடன் ஒட்டிக் கொண்டு செல்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய அதிதீவிர கரோனா வைரஸ் குறித்து நான் கவலை அடைந்துள்ளேன். ஆனால், அது எந்த வகையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இப்போதே கூறுவது இயலாது என்று பிரிட்டனில் உள்ள காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைரஸ் குறித்து படித்து வரும் மருத்துவர் ரவி குப்தா கூறியுள்ளார்.
வைரஸில் இந்த புதிய தகவமைப்புகள் எவ்வாறு நிகழ்கின்றன?
புதிதாக உருவாகும் வைரஸ்கள், அவ்வப்போது தங்களது உள்கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டேயிருக்கும், இது வழக்கமான மாறுபாடுதான். சில வைரஸ்கள் ஒவ்வொரு நாடு அல்லது கண்டத்துக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொண்டு, வேகமாகப் பரவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
ஆனால், கவலைதரும் விஷயம் என்னவென்றால், இந்த வைரஸ் அதன் மேற்புரத்திலிருக்கும் புரதத்தை மாற்றிக் கொண்டிருப்பதே, இதனால், தற்போதிருக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதே.