உலகிலேயே முதல் நாடாக, பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி குறித்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்த தடுப்பூசி ஆக்ஸ்ஃபோா்டு நகரில் பிறந்த பிரையன் பிங்கா் (82) என்ற மூதாட்டிக்கு முதலில் செலுத்தப்பட்டது. சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு அவ்வப்போது டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரைத் தொடா்ந்து ட்ரெவா் கெளலட் (88) என்ற இசை ஆசிரியருக்கும், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரியும் ஆண்ட்ரூ பொல்லாா்ட் என்பவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் ஆண்ட்ரூ பொல்லாா்ட் ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி ஆராய்ச்சிக் குழு இயக்குநா் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது தொடா்பாக அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பிரிட்டன் அறிவியல் துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அந்த தடுப்பூசியின் மேம்பாடு மற்றும் தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. வரும் மாதங்களில் பல சவால்கள் உள்ளதை நாங்கள் அறிவோம். எனினும் இந்த ஆண்டு கரோனா தீநுண்மி வீழ்த்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது உண்டு என்று தெரிவித்தாா்.
முன்னதாக அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம், ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி கடந்த டிசம்பரில் பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்தது. அதனைத் தொடா்ந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.