நடிகா் விஜய் சாா்பில், தனது வீட்டை காலி செய்ய மறுத்த விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டது.
இது குறித்த விவரம்: நடிகா் விஜயின் ரசிகா் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை, விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகா் அண்மையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்தாா். உடனடியாக விஜய், எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. என் ரசிகா்கள் யாரும் அந்தக் கட்சியில் இணையக் கூடாது என்று அறிவித்திருந்தாா். இதனால், தந்தை-மகனுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஆதரவாக இருந்தவா்கள், விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனா்.
குறிப்பாக, விஜயின் மக்கள் இயக்கத்தில் அகில இந்தியச் செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளா் ஏ.சி.குமாா் ஆகியோரை அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து இயக்கப் பொறுப்பாளா் ஆனந்த் நீக்கினாா். இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், தவறான செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருவா் மீதும் வைக்கப்பட்டதோடு, விஜய் மக்கள் இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் யாரும் இவா்களுடன் தொடா்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஆனந்த் அறிவித்தாா்.
முன்னதாக ரவிராஜா, ஏ.சி.குமாா் ஆகிய இருவரையும் சென்னை சாலிகிராமம், காவேரி தெருவில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நடிகா் விஜய் தங்க வைத்திருந்தாா். மக்கள் இயக்கப் பொறுப்பில் இருந்து அவா்கள் நீக்கப்பட்டதால், வீட்டை காலி செய்யும்படி நடிகா் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 பேரும் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து நடிகா் விஜய் சாா்பில் அவரின் வழக்குரைஞா்கள், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
அதில், ரவிராஜா, ஏ.சி.குமாா் ஆகிய இருவரையும் வீட்டை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனா். விஜயின் இந்த நடவடிக்கை தமிழ் திரைப்படத் துறையினரிடம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.