எலெக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் இனம், தன் இரையை வேட்டையாட கூட்டாக சேர்ந்து மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் ஒன்றாக சேர்ந்து, தன் உடலில் இருக்கும் மின்சாரத்தை வெளியிட்டு, தன் இரையை தாக்குவதை அமேசான் வனப் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர்.
“அந்த காட்சியை பார்க்க அருமையாக இருந்தது, எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் பொதுவாக தனித்து வாழ்பவை என்று தான் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் கார்லோஸ் டேவிட் டி சந்தனா.
இதுதொடர்பான ஆய்வு முடிவு, ‘எகாலஜி அண்ட் எவல்யூஷன்’ என்ற சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பிரேசி நாட்டின் மனஸ் என்ற ஊரிலுள்ள ‘நேஷனல் சென்டர் ஃபார் அமேசானியன் ரிசர்ச்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த டக்லஸ் பஸ்டோஸ் இந்த காட்சியைப் படம் பிடித்தார். டெட்ராஸ் என்கிற சிறிய மீன்கள் தான் எலெக்ட்ரிக் ஈல் மீன்களின் இலக்கு. ஈல் மீன்கள் தங்களின் உடலிலிருந்து மின்சாரத்தைப் பாய்ச்சிய உடன் அதிர்ச்சியில் நீருக்கு மேல் தூக்கியெறியப்படும் டெட்ராஸ் மீன்கள், மீண்டும் தண்ணீரில் விழும்போது உயிரிழந்து அசைவற்றுப் போயின.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சியில் இருக்கும் ‘ஸ்மித்சோனியன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி’ என்கிற அமைப்பில் பணிபுரிந்து வரும் கார்லோஸ் டேவிட் டி சந்தனா, இந்த காட்சியைக் கண்டு வியப்புற்றதாக கூறுகிறார்.
“என்னுடைய குழந்தைப் பருவத்தில், அமேசானில் இருக்கும் என் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். நான் மீன்களை சேகரித்திருக்கிறேன். இந்தப் பகுதியில் இருக்கும் எலெக்ட்ரிக் மீன்களை குறித்து நான் 20 ஆண்டுகள் ஆராய்ந்திருக்கிறேன். ஆனால், என் வாழ்கையில் நான் எப்போதுமே வளர்ந்த நிலையில் உள்ள எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் இத்தனை கூட்டமாக ஒன்றாக இருந்ததைப் பார்த்ததில்லை” என்று சந்தனா கூறுகிறார்.
அமேசானின் அடர்ந்த காடுகளில் ஓடும் ஆறுகளில் சந்தனா மேற்கொண்ட ஆராய்ச்சியில் 85 புதிய வகை எலெக்ட்ரிக் ஈல் ரக மீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுமார் 250 ஆண்டுகளாக ஒரேயொரு எலெக்ட்ரிக் ஈல் மீன் வகை தான் இருப்பதாக நம்பப்பட்டது. இந்த நிலையில்தான் சந்தனா தனது அணியினருடன் சேர்ந்து மூன்று வேறுபட்ட எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இந்த எலெக்ட்ரிக் மீன்களிலேயே வோல்டாஸ் எலெக்ட்ரிக் ஈல் என்கிற வகையான மீன்கள் தான் அதிபயங்கரமான சக்தி கொண்டவை. இந்த வகை ஈல்களால் 860 வோல்ட் மின்சாரத்தை வெளிப்படுத்த முடியும். உலகில் இருக்கும் விலங்குகளிலேயே அதிக அளவில் மின்சாரத்தை வெளிப்படுத்தும் உயிரினம் இதுதான். இந்த மீன்கள் 2 மீட்டர் நீளம் வரை வளரும்.
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு பிரத்யேக பாகம் இந்த ரக மீன்களின் உடல்களில் இருக்கின்றன. இந்த பாகம் ஆயிரக்கணக்கான மின்பகுபொருள்கள் (Electrocytes) எனப்படும் பேட்டரிகளை போன்ற அமைப்பினை கொண்டுள்ளது. இந்த மீன்கள் தூண்டப்படும் போது, இந்த பாகத்திலிருந்து மின்சாரம் வெளிப்படுகிறது. அது ஈல் மீன்களின் உடல் முழுக்க பரவி வெளிப்படுகிறது.
“இந்த வகை மீன்கள் தனித்துவமானவை. இவை உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாடுகின்றன. தற்போது இந்த ஈல் மீன்கள் கூட்டமாகவும் வேட்டையாடுகின்றன’ என்கிறார் சந்தனா.
“உலகில் சுமாராக 65,000 உயிரினங்கள் முதுகெலும்பு கொண்ட உயிரினங்களாக இருக்கின்றன. அதில் 100-க்கும் குறைவான உயிரினங்கள் தான் கூட்டாக சேர்ந்து இரையை வேட்டையாடுகின்றன.”
கடந்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் ஈல் மீன்களின் இந்த மின்சாரத்தை வெளிப்படுத்தும் உயிரியல் பண்புதான், மனிதர்களின் உடலுக்குள் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்களுக்கான (உதாரணம் பேஸ் மேக்கர்) மின்சார ஆதாரத்தை உருவாக்க உந்துதலாக இருந்தது.
இந்த கண்டுபிடிப்பானது நாம் இன்னும் அமேசானை குறித்தும், அதன் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் குறித்தும் எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது என்கிறார் சந்தனா.
“பருவநிலை மாற்றம், காட்டுத்தீ, காடுகளை அழித்தல் போன்ற செயல்களால் எலெக்ட்ரிக் ஈல் மீன்களின் வாழ்விடம் மற்றும் வாழ்க்கை சூழல் கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றன” என்கிறார் சந்தனா.
“இப்படி ஒரு பக்கம் அழிவு நடந்து கொண்டிருக்கும் வேளையில், இது மாதிரியான ஆராய்ச்சிகள், நமக்கு இன்னும் எவ்வளவு விடயங்கள் தெரியாது, எத்தனை உயிரினங்களின் வாழ்கை வரலாற்றை நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பதை கோடிட்டு காட்டுகிறது” என்கிறார் சந்தனா.