இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கும் 5ஜி சோதனை சான் காரணம் என கூறி வைரலாகும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பறவைகள் இறப்புக்கு ஜியோ 5ஜி சோதனை தான் காரணம், ஆனால் பறவை காய்ச்சல் தான் காரணம் என மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு இந்தியாவில் 5ஜி சோதனை துவங்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏவியன் காய்ச்சல் தொற்று அதிகரித்து இருப்பதே பறவைகள் இறக்க முக்கிய காரணம் ஆகும்.
மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை விரைவில் துவங்கும் என சமீபத்தில் தெரிவித்தார். எனினும், 5ஜி சோதனையை துவங்க மத்திய அரசு எந்த டெலிகாம் நிறுவனத்திற்கும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
அந்த வகையில் இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ நடத்துவதாக கூறும் 5ஜி சோதனை காரணம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.