உங்களுக்கு காரமான உணவுகளை ரொம்ப பிடிக்குமா? உங்கள் உணவுகளில் சிறிது காரத்தை அதிகரிக்க விரும்பினால், அதற்கு பச்சை மிளகாய் சரியான பொருளாக இருக்கும். சமைக்கும் போது பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உணவிற்கு காரத்தை அளிக்கும் பச்சை மிளகாய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து, மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பது, எடையைக் குறைக்க உதவுவது என்று பல நன்மைகளைத் தரக்கூடியது. அதோடு பச்சை மிளகாயில் கலோரிகள் குறைவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவுப் பொருளும் கூட. கூடுதலாக, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன.
இப்போது பச்சை மிளகாயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் அல்லது பச்சை மிளகாய் சேர்த்த உணவுகளை உண்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம்.
பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் தான் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இதன் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன.
பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறையும்.
பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது சவ்வுகளிடையே இரத்த ஓட்டத்தைத் தூண்டி, உடலில் உற்பத்தியாகும் சளியை இளகச் செய்கிறது. சிம்பிளாக கூற வேண்டுமானால், பச்சை மிளகாய் சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுக்களை அழிக்க உதவி, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு உணவுகள் பெரிதும் உதவி புரியும். குறிப்பாக பச்சை மிளகாய் இதற்கு நிச்சயம் உதவும். ஏனெனில் பச்சை மிளகாயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளது. ஆனால் பச்சை மிளகாயை ஒரு டப்பாவில் போட்டு மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் தான், அதில் உள்ள வைட்டமின் சி நீடித்திருக்கும். இல்லாவிட்டால், வெளிக்காற்று, சூடான மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால், அதில் இருக்கும் வைட்டமின் சி குறைந்துவிடும்.
உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் சர்க்கரை நோய் இல்லாதவர்களை காண்பது என்பது கடினம். அப்படிப்பட்ட சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம். இருப்பினும், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது பச்சை மிளகாயை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.
இதுவரை நாம் பச்சை மிளகாயின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்த்தோம். ஆனால் அதன் பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக அளவுக்கு அதிகமானால் எப்பேற்பட்டதும் தீங்கை விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிவோம். இது பச்சை மிளகாய்க்கும் பொருந்தும். இப்போது பச்சை மிளகாயின் சில பக்க விளைவுகளைக் காண்போம்.
பச்சை மிளகாயில் உள்ள எரிச்சல் ப்ளேவர்கள், தீவிரமான நெஞ்செரிச்சலை உண்டாக்கும் திறன் கொண்டவை. அதோடு பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான எரிச்சலுடன் கூடிய வலியை உண்டாக்குவதோடு, உடலினுள் அழற்சி/காயங்களையும் உண்டாக்கும்.
பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால், அது சிலருக்கு அடிவயிற்று வலி அல்லது வலிமிக்க வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும். நீங்கள் பச்சை மிளகாயால் செரிமான பிரச்சனையை சந்தித்து, தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்த உணவை உண்ணும் போது, அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இந்த கேப்சைசின் அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், அது சரும அழற்சியை உண்டாக்கும். எனவே பச்சை மிளகாயை அளவாக சாப்பிடுங்கள்.