அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று காண்பித்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்துள்ளது பிசிசிஐ.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி 2 வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 4 வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி 2 வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ஓட்டங்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2 – 1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.
முதல் டெஸ்டில் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3 வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5 ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றியை நிகழ்த்தியுள்ள இந்திய அணிக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது பிசிசிஐ. இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.