உலகில் நன்மையை ஏற்படுத்துவதற்கான தலைமை சக்தியாக அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம் என்று அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவியேற்பு உரையில் தெரிவித்தார்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பாராளுமன்றத்தில் அந்நாட்டின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்றார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: ஜனநாயகம் விலைமதிப்பில்லாதது என்பதை நாம் (அமெரிக்கர்கள்) மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். அமெரிக்காவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதன் மூலம் ஜனநாயகம் தழைத்துள்ளது. எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்குமான ஜனாதிபதியாக நான் இருப்பேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா தொற்றை கடந்து வருவது, பாகுபாடற்ற நீதி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நான் அளித்தேன். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
இந்த தேசம் (அமெரிக்கா) அரசியல் பயங்கரவாதம், உள்நாட்டு தீவிரவாதம், வெள்ளையர்களின் மேலாதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து நிற்க வேண்டும். அனைவருக்கும் நீதி என்ற கனவு இனி ஒருபோதும் ஒத்திவைக்கப்படாது. ஒற்றுமையாக இருந்தால் நம்மால் மிகப்பெரிய காரியங்களை சாதிக்க முடியும். உலகில் நன்மையை ஏற்படுத்துவதற்கான தலைமை சக்தியாக அமெரிக்காவை மீண்டும் நம்மால் உருவாக்க முடியும்.
நம்பகமான கூட்டாளி: கடந்த 4 ஆண்டுகளில் நட்பு நாடுகள் பலவற்றுடன் சச்சரவு ஏற்பட்டது. எனது பதவிகாலத்தில் அந்த நாடுகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டு அவற்றுடன் மீண்டும் நட்புறவை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உலக நாடுகளுடன் அமெரிக்கா மீண்டும் ஒத்திசைந்து செயல்பட வழிவகுக்கப்படும். அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான வலிமையான, நம்பகமான கூட்டாளியாக அமெரிக்கா திகழும் என்றார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க வந்த கமலா ஹாரிஸ் ஊதா நிற ஆடையில் வந்தார். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் நீல நிறம், குடியரசுக் கட்சியின் சிவப்பு நிறம் ஆகியவற்றின் கலப்பாகக் கருதப்படும் ஊதா நிறம், வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட இரு கட்சிகள் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுவது, பெண்களின் வாக்குரிமை ஆகியவற்றை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிற ஆடையை அணிந்து வந்ததன் மூலம் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்புடன் செயல்படுவது, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு கமலா ஹாரிஸ் முக்கியத்துவம் அளிப்பார் என்று கருதப்படுகிறது.