இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகின் அதிக எரிமலைக் கொண்ட நாடாக இந்தோனேசியா உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள மெராபி எரிமலை புதன்கிழமை வெடித்தது. இதனால் அப்பகுதியில் வானம் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் அபாயக் குறைப்பு மையத்தின் தலைவர் கஸ்பானி, மெராபி எரிமலை கிட்டத்தட்ட 30 முறை தீப்பிழம்புகளை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை புகைமூட்டங்களும், சாம்பல் துகள்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2010ஆம் ஆண்டில் மெராபி எரிமலை வெடித்ததில் 350க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.