கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு 2 வார தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு வியாழக்கிழமை தனது ஆய்வுப் பணியைத் துவங்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவின் கடவுச்சீட்டு சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட ஆய்வுக் குழு கடந்த 14 ஆம் திகதி வூஹான் நகரத்தை அடைந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வுக்குழு வியாழக்கிழமை தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
கொரோனா ஆய்வு நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் கொரோனா தடுப்பு முகாம்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ள ஆய்வுக்குழு கொரோனா தோன்றியதாக குறிப்பிடப்படும் யூஹான் நகரிலும் தனது ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழுவிற்கு சீன அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.